ஒதுங்கும் பிரேமலதா.. மகிழ்ச்சியில் அதிருப்தியாளர்கள்.. பிரிந்த நிர்வாகிகள் மீண்டும் தேமுதிகவில்!
சென்னை: விஜயகாந்த் மனைவி பிரேமலதா தேமுதிக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகிக்கொண்டிருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மூவர் மீண்டும் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.
பிரேமலதா விலகலை தொடர்ந்து மேலும் பல அதிருப்தியாளர்கள் மீண்டும் விஜயகாந்த்துடன் கை கோர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேமுதிக கூடாரம் கலகலப்படைந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துக்கொள்ள விஜயகாந்த்துக்கு விருப்பம் இருந்ததாகவும் அவரது மனைவி பிரேமலதா அதை தடுத்ததாகவும் கூறப்பட்டது.

வைகோ புகுந்தார்
பாஜகவோடு கூட்டணி அமைக்க பிரேமலதா விரும்பினார். ஆனால், வைகோ உள்ளே புகுந்து, விஜயகாந்த், பிரேமலதா இருவரையும் மனம்மாற்றி மக்கள் நல கூட்டணியில் தேமுதிகவை கூட்டணி அமைக்க செய்தார்.

திமுகவை விளாசிய பிரேமலதா
ஜெயலலிதா குறித்து மட்டுமின்றி, திமுக குறித்தும் தொடர்ச்சியாக பிரேமலதா தனது பொதுக்கூட்டங்களில் விளாசி வந்தார். விஜயகாந்த் சும்மா இருந்தாலும், திமுக குறித்து பேசிவந்தது பிரேமலதா மட்டுமே.

விஜயகாந்த்துக்கு சங்கடம்
பிரேமலதா இவ்வாறு தனது உரைகளில் திமுகவை பற்றி விளாசி தள்ளியதால், விஜயகாந்த்தால் திமுக பக்கம் நெருங்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது.

முக்கிய நிர்வாகிகள் விலகல்
தேமுதிகவின் கூட்டணி முடிவால் அதிருப்தியடைந்து சந்திரகுமார், பார்த்தீபன் போன்ற சில முக்கிய நிர்வாகிகள் மக்கள் தேமுதிக என்ற தனிக்கட்சியை தொடங்கி பிரிந்து சென்றனர். மேலும், பிரேமலதா கட்டுப்பாட்டில் தேமுதிக கட்சி இருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

இணைப்பு விழா
தேர்தல் முடிந்த நிலையில், இந்த நிர்வாகிகள் திமுகவில் இணைய முடிவு செய்துள்ளனர். வரும் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இணைப்பு விழாவில் மக்கள் தேமுதிக, திமுகவில் இணைய உள்ளது.

இப்ஃதார் ஆப்சென்ட்
இந்த நிலையில், பிரேமலதா தேமுதிக கட்சி விவகாரங்களில் இருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளார். தேமுதிக சார்பில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்ற நிலையில், பிரேமலதா பங்கேற்கவில்லை. இது யூகங்களை அதிகரித்தது.

மீண்டும் இணைந்த முக்கிய புள்ளிகள்
இந்நிலையில்தான், திமுகவில் இணைந்த ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் வேணு, கடலூர் கவுன்சிலர் துரைமகாதேவன் ஆகியோர் தேமுதிக பொருளாளர் இளங்கோவன், செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில் மீண்டும் தேமுதிகவில் இன்று இணைந்தனர்.

திரும்பி வர தயார்
இதேபோல பிரிந்து சென்ற, மேலும் பல நிர்வாகிகள் விரைவில் தேமுதிகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷும் கட்சி விவகாரங்களில் இருந்து விலகியிருப்பதாக கூறப்படுவதால் அதிருப்தியில் வெளியேறியவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாடகம்
அதேநேரம், தேமுதிகவில் இருந்து விலகிய மேட்டூர் எஸ்.ஆர்.பார்த்திபன், கும்முடிப்பூண்டி சேகர், ஈரோடு வி.சி.சந்திரகுமார் ஆகியோர் இந்த விவகாரத்தில் சந்தேகம் வெளிப்படுத்துகிறார்கள். எஸ்.ஆர்.பார்த்திபவன், வி.சி.சந்திரகுமார் ஆகியோர் கூறுகையில், தேமுதிகவில் இருந்து பிரேமலதா விலகி இருப்பதாக கூறப்படுவது நாடகம். அவர் கட்சிப் பணியில் மற்றும் கட்சி நடத்தும் போராட்டங்களில், பொதுக்கூட்டங்களில் ஈடுபட மாட்டார் என்று வெளிப்படையாக இதனை அறிவித்தால் வரவேற்கலாம் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications