ராஜ்யசபாவில் பாஜகவை ஆதரிக்க திமுக திட்டம்?
சென்னை: மத்தியிலும், மாநிலத்திலும் எந்தவிதமான பிடிப்பும் இல்லாத நிலையில், இருக்கிற ஒரு சில கூட்டணிக் கட்சிகளும் விலகப் போவதாக செய்திகள் வரும் நிலையில், ராஜ்யசபா வழியாக பாஜகவை ஆதரிக்க திமுக திட்டம் தீட்டியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான முன்னோட்டமே திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடாவைச் சந்தித்தது என்கிறார்கள்.
இந்த சந்திப்பு மாற்றுத் திறனாளிகள் தொடர்பானது என்றாலும் கூட ரகசியமாக பாஜகவுக்கு, திமுக ஆதரவு தருவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைதான் இது என்றும் சொல்லப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் விவகாரம்
ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பெட்டிகள் அவர்கள் செளகரியமாக செல்வதற்கான சூழ்நிலை மறுக்கப்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடாவை கனிமொழி சந்தித்து கோரிக்கை மனு கொடுத்ததாகத்தான செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகின.

உடனடியாக செயல்பட்ட கெளடா
கனிமொழியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதாக கூறிய அமைச்சர் கெளடா, சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கும் இந்தப் பிரச்சினையை உடனடியாக சரி செய்யுமாறும் உத்தரவிட்டார்.

அடுத்து அரசியல்
இதுதவிர தமிழகம் தொடர்பான மேலும் சில கோரிக்கைகளையும் கனிமொழி கெளடாவிடம் தெரிவித்தார். அவற்றையும் உரிய முறையில் பரிசீலிப்பதாக கெளடா உறுதியளித்தார். இதையடுத்து இருவரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

ஆதரவு கோரிய கெளடா
தற்போது லோக்சபாவில் திமுகவுக்கு உறுப்பினர்கள் இல்லை. ஆனால் ராஜ்யசபாவில் கனிமொழி உள்பட நான்கு பேர் உள்ளனர். எனவே அவர்கள் பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கெளடா கேட்டுக் கொண்டாராம்.

பாஜகவுக்கு ஆள் பற்றாக்குறை
லோக்சபாவில் பெரும்பான்மையுடன் பாஜக இருந்தாலும் கூட, ராஜ்யசபாவில் அதற்குப் போதுமான ஆதரவு இல்லை. எனவே மற்றவர்களையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலைமை. எனவேதான் திமுகவின் நான்கு உறுப்பினர் ஆதரவும் கூட அதற்கு முக்கியமானது.

கருணாநிதியிடம் கேட்டு விட்டு
கெளடாவின் கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதியிடம் தெரிவிப்பதாகவும், நிச்சயம் தமிழக நலன் பாதிக்கப்படாத வகையில் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு திமுக ராஜ்யசபாவில் செயல்படும் என்று கனிமொழி கூறினாராம்.

அரசுக்கு ஆதரவு
மேலும் இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவு என்பதை விட அரசுக்கு ஆதரவாக திமுக செயல்படும் என்றும் கனிமொழி கூறியதாக தெரிகிறது.

அணுகினால் தருவோம்
கனிமொழியின் இந்த உறுதி பாஜக வட்டாரத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. எந்தப் பக்கமிருந்து ஆதரவு வந்தாலும் அப்படியே தக்க வைத்துக் கொள்ள முயல்வது பாஜகவின் பாணி. எனவே திமுகவின் ஆதரவு கிடைத்தால் அதையும் விடாமல் பிடித்துக கொள்ளவே பாஜக முயலும் என்பதால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications