இளங்கோவனின் 'நக்கல் ராசி' ஒர்க்கவுட் ஆகி வாசன் பெரிய ஆளாகிவிடுவாரோ?
தஞ்சை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் தன்னை நக்கல் அடித்துள்ளாதல் தான் அரசியலில் உயர்ந்த இடத்தை அடையப் போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி தெரிவித்துள்ளார்.
இனியும் காங்கிரஸார் காமராஜரின் பெயரை கூறி வாக்கு கேட்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி தெரிவித்தார். அதற்கு கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தஞ்சையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம், இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய கார்த்தி கூறுகையில்,
நான் இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் தெரிவித்த கருத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். சிலருக்கு அது புரிந்தும் விமர்சிக்கிறார்கள். நான் கட்சிக்காக பாடுபடவில்லை, சமுதாயத்திற்காக உழைக்கவில்லை என்கிறார்கள்.
மாநிலத்தில் மீனவர்கள் பிரச்சனை, பால் விலை உயர்வு பிரச்சனை, முதல்வரின் நிலை, சென்னையில் மேயர் உள்ளாரா, இல்லையா? உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளை பேசாமல் போனதால் தான் தோல்வி அடைந்தோம். அதனால் தான் பழைய கதைகளை பேசி எந்த பலனும் இல்லை என்றேன்.
ஆனால் சிலர் அதை தவறாக புரிந்து கொண்டு விமர்சிக்கிறார்கள். ஏன் நம் தலைவர் இளங்கோவன் கூட என்னை அவருக்கே உரிய பாணியில் நக்கல் செய்துள்ளார். எனக்கு அதை பற்றி கவலை இல்லை. ஏன் என்றால் அவர் யாரை எல்லாம் நக்கலடிக்கிறாரோ அவர்கள் எல்லாம் அரசியலில் உயர் நிலை அடைகிறார்கள். நானும் உயர் நிலையை அடைவேன் என்றார்.
இளங்கோவன் வந்து கார்த்தியிடம் இருந்து மைக்கை வாங்கி பேசுகையில்,
கார்த்தியின் கருத்தை ஏற்கிறேன். இவரை போன்ற இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களின் கருத்தை நாம் ஏற்க வேண்டும். அதுவே ஆரோக்கியமான அரசியல் ஆகும். நான் யாரை எல்லாம் நக்கலடிக்கிறேனோ அவர்கள் அரசியலில் உயர் நிலை அடைகிறார்கள் என்பது இத்தனை நாட்களாக எனக்கு தெரியவில்லையே.
இனி நான் பிறரை விட்டுவிட்டு என்னையே நக்கலடித்துக் கொள்வேன் என்றார்.
இளங்கோவன் மேடை தோறும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை நக்கலடித்து வருகிறார். அப்படி என்றால் அவர் நிச்சயம் அரசியலில் உயர்வாரோ?












Click it and Unblock the Notifications