கனிமொழி பிரச்சாரம் மாற்றம் தருமா? அல்லது ஏமாற்றம் தருமா?
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் அதன் தலைவர் கவிஞர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், திமுக கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை தலைவருமான கனிமொழி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அவர் ஏப்ரல் 5ம் தேதி தென்சென்னையில் பிரச்சாரத்தை துவங்கி, ஏப்ரல் 22ம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு செய்கிறார்.

இந்த முறை திமுகவில் கனிமொழி ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் வழங்கப்படவில்லை. மாறாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் பலருக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கனிமொழி தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார்.
முன்னதாக 2ஜி ஸ்பெக்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. பின்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையி்ல், கனிமொழி பிரச்சாரம் எந்த வகையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக அமையப் போகின்றது என்பதையும், அவர் பிரச்சாரம் பொது மக்கள் மத்தியில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதையும் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications