வைகோவின் ராசியில்லா ராஜா பட்டத்தை தவிடுபொடியாக்குமா கோவில்பட்டி?
சென்னை: அரசியல் போராளியாக அறியப்பட்டாலும், தேர்தலுக்கும் வைகோவுக்கும் ஏழாம் பொருத்தம்தான். போட்டியிட்ட பல தேர்தல்களில் அவர் தோல்வியையே பரிசாக பெற்றுள்ளார். இம்முறை கோவில்பட்டி அந்த மோசமான சரித்திரத்தை மாற்றி எழுதுமா என்பதே மதிமுக தொண்டர்கள் எதிர்பார்ப்பு.
திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட பிறகு 1994ம் ஆண்டு மறுமலர்ச்சி திமுக என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.
1996ம் ஆண்டு முதன்முறையாக சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. திமுக மற்றும் அதிமுகவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் மதிமுக போட்டியிட்டது.

இரட்டை தோல்வி
ஒரு தொகுதியிலும் மதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. வைகோ தான் போட்டியிட்ட விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் தோற்றார். அதே ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலின்போது சிவகாசி தொகுதியிலும் தோல்வியே கிடைத்தது வைகோவுக்கு.

இடையில் கொஞ்சம் வெற்றி
1998 மற்றும் 1999ம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வைகோ வெற்றிபெற்றார். 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெற்றிபெற நல்ல வாய்ப்பு இருந்தும் வைகோ போட்டியிடாமல் கட்சியை சேர்ந்தவருக்கு தொகுதியை விட்டுக்கொடுத்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ், மதிமுக, திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

விருதுநகரில் தோல்வி
ஆனால் 2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட வைகோ தோல்வியைத்தான் தழுவினார். 2011ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மதிமுக போட்டியிடப்போவதில்லை என்று வைகோ அறிவித்துவிட்டார்.

மீண்டும் தோல்வி
2014 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியை தமிழகத்தில் அமைக்க முன் முனைப்பாக உழைத்த வைகோ, விருதுநகரில் மீண்டும் தோற்றார். ஜெயலலிதாவின் அலையில் வைகோவும் அடித்து செல்லப்பட்டார்.

ராசியில்லா ராஜா
தமிழக அரசியலில் மிகப்பெரிய போராளியாக பார்க்கப்படும் வைகோ, தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளில் உடனுக்குடன் குரல் கொடுப்பவர். ஆனால் வைகோ ஒரு ராசியில்லாத ராஜாவாகவே பார்க்கப்படுகிறார். இந்த நிலையில், கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் முடிவை வைகோ எடுத்துள்ளார்.

ஜாதி பலம் கைகொடுக்குமா?
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும், கோவில்பட்டி தொகுதியில் நாடார் ஜாதியினரை தவிர்த்து நாயக்கர் உள்ளிட்ட பல ஜாதி பிரிவினரும் கணிசமாக வசிக்கிறார்கள். கட்சி, அரசியலை தாண்டி ஜாதி பலமும் வைகோவுக்கு கை கொடுக்க வாய்ப்புள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள் மதிமுக தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications