ஜல்லிக்கட்டு நடக்காவிட்டால் பொன். ராதா விலகி விடுவாரா?.. இளங்கோவன் கேள்வி
விருதுநகர்: இந்த வருடம் எப்படியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று பொன். ராதாகிருஷ்ணன்தான் சொல்லி வருகிறார். பாஜகவினர் சொல்லிய எதையும் செய்ததில்லை. ஒரு வேளை ஜல்லிக்கட்டு நடக்காவிட்டால் பொன். ராதாகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று கேட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
விருதுநகர் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்துவோம் என, பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். ஆனால் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், தற்போதுள்ள விதிகளின்படி ஜல்லிக்கட்டை நடத்த முடியாது என தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் அரசியலுக்கு அப்பாற்பட்டு எனது நண்பர். நல்லவர். ஜல்லிக்கட்டை பொங்கல் பண்டிகையையொட்டி நடத்த முடியவில்லை என்றால், தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்வாரா? என கேட்க விரும்புகிறேன்.
இந்த விஷயத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்னவென்றால், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக் கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதுதான். இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்காத பட்சத்தில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். அதனை கொண்டு வந்தால், விலங்கின ஆர்வலர்கள் தடைபெற்று விடுவார்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல. முதலில் அவசர சட்டத்தை கொண்டு வரட்டும்.
பாரதீய ஜனதா அரசு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில், தாங்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி களில் ஒன்றைக்கூட இதுவரை நிறைவேற்றவில்லை. விரைவில் சட்ட்சபை தேர்தல் வர உள்ளது. கூட்டணி அமைப்பது பற்றி காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications