"புரட்சி முதல்வர்" ஓ.பி.எஸ்ஸை கட்சியை விட்டு நீக்க தைரியம் இல்லாத சசிகலா!
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வசம் இருந்த அதிமுக பொருளாளர் பதவியை மட்டும் பறித்துள்ளார் சசிகலா. அவரை கட்சியை விட்டு நீக்கும் முடிவை அவர் எடுக்கவில்லை.
சென்னை: திடீரென புரட்சியில் குதித்து அதிமுகவினரை தூங்க விடாமல் செய்து விட்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீது அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது பொருளாளர் பதவியை மட்டும் பறித்துள்ளார் சசிகலா. அதேசமயம், அவரை கட்சியை விட்டு நீக்கினால் அதிமுகவினர் மொத்தமாக கொந்தளிபப்பார்கள் என்பதால் அதை மட்டும் அவர் செய்யவில்லை.
இதுவரை பணிவு, அமைதி, மென்மையான சிரிப்பு என்ற அளவில்தான் தமிழக மக்கள் ஓ.பன்னீர் செல்வத்தைப் பார்த்துள்ளனர். ஆனால் முதல் முறையாக ஒருவரை, குறிப்பாக தனது கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை குற்றம் சாட்டி பகிரங்கமாகப் பேசியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். இது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

வழக்கமாக கட்சித் தலைமைக்கு எதிராக யாராவது கருத்து கூறினால் அவரை கட்சியை விட்டு நீக்குவார்கள். அந்த வகையில் தற்போது ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை விட்டு நீக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அப்படி ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டால் அது அதிமுகவின் பிளவுக்கு வழி வகுக்கும் என்பதால் இது பரபரப்பையும் கிளப்பியிருந்தது.
காரணம், ஓ.பன்னீர் செல்வத்திற்கு கிட்டத்தட்ட 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஓ.பன்னீர் செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டால் கட்சி உடையும், ஆட்சியும் கவிழும். அப்படி ஒரு நிலை வந்தால் திமுக, வெளியிலிருந்து அதிமுகவுக்கு ஆதரவு தரக் கூடிய சூழல் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த. நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவியை மட்டும் பறித்துள்ளார் சசிகலா. இதுவே ஓ.பி.எஸ்ஸுக்கு கிடைத்த பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. காரணம், அவரை முழுமையாக கட்சியை விட்டு நீக்கும் தைரியம் சசிகலாவுக்கு வரவில்லை. அவர் பயப்படுகிறார். ஓ.பி.எஸ்ஸை கட்சியை விட்டு நீக்கினால் கட்சி உடையும், தானும் திவாலாகி விரட்டப்படுவோம் என்ற அச்சம் சசிகலாவிடம் உள்ளதாக கருதப்படுகிறது. எனவேதான் அந்த முடிவை அவர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications