சசிகலா புஷ்பாவை அறைந்தாரா ஜெயலலிதா.. புகாருக்கு பதில் சொல்வாரா உடனிருந்த தம்பிதுரை?
சென்னை: அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக 2014-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் சிக்கியவர். குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக சசிகலா புஷ்பா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அதிமுக பெண்கள் பிரிவு தலைவர் பதவியில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டிருந்தார். அந்த சர்ச்சை ஓயும் முன்பாக, திமுக எம்.பி திருச்சி சிவாவை, டெல்லி ஏர்போர்ட்டில் வைத்து கன்னத்தில் அறைந்தார் சசிகலா புஷ்பா.
அறைந்தவரும், அறை வாங்கியவரும் இந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டனர். தேசிய அளவில் தமிழக அரசியல்வாதிகளுக்கு இந்த சம்பவம் களங்கம் ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவுடன் சந்திப்பு
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்திற்கு சசிகலா புஷ்பாவை வரவழைத்தார். அப்போது லோக்சபா துணை சபாநாயகரான அதிமுக மூத்த தலைவர் தம்பி துரையும் உடன் இருந்தார்.
நீண்ட சந்திப்பு
சசிகலா புஷ்பாவின் நடவடிக்கை கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக கூறி எச்சரித்தார் ஜெயலலிதா என தகவல்கள் கசிந்தன. சில மணி நேரங்கள் இந்த சந்திப்பு நீடித்ததால் சசிகலா புஷ்பாவுக்கு, ஜெயலலிதா செம டோஸ் விடுத்திருப்பார் என்று கூறப்பட்டது.
உயிருக்கு ஆபத்து
இந்நிலையில்தான், இன்று ராஜ்யசபாவில் வைத்து பேசிய சசிகலா புஷ்பா, எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய கோரி ஜெயலலிதா வலியுறுத்தியதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், ஜெயலலிதாவுடனான சந்திப்பின்போது அவர் தன்னை அறைந்ததாகவும் கூறி கண்ணீர்விட்டு கதறி அழுதார்.
பாதுகாப்பு தர தயார்
இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரங்களுக்குள் தான் செல்ல விரும்பவில்லை என கூறிய அமைச்சர் வெங்கய்யாநாயுடு, பாதுகாப்பு கோரி கடிதம் மூலம் சசிகலா கோரிக்கைவிடுத்தால் அதை அரசு பரிசீலிக்கும் என்றார்.
பதில் வருமா
முதல்வர் ஜெயலலிதா தன்னை அறைந்தார் என சசிகலா புஷ்பா நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே கூறிவிட்டார். இது மிகப்பெரிய பிரச்சினை. ஒருவேளை ஜெயலலிதா அப்படி செய்திருந்தால் அது சட்டப்படி தவறான செயலாகும். எனவே இதுகுறித்து முதல்வர் தரப்பில் இருந்து பதில் வருமா என காத்திருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
தம்பிதுரை சொல்வாரா
ஒருவேளை முதல்வர் தரப்பில் இருந்து இதை ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், சந்திப்பின்போது உடனிருந்த தம்பிதுரை, நடந்த சம்பவங்கள் குறித்து விளக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
பொறுப்பாளி
ஏனெனில் இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலராக விளங்கும் துணை சபாநாயகர் பொறுப்பில் இருப்பவர் தம்பிதுரை. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடிக்கப்பட்டிருந்தால், அதுவும் அவரது முன்னிலையிலேயே நடந்திருந்தால் அதுகுறித்து வெளிப்படுத்த வேண்டியதும் அவரது கடமையாகிறது. ஒருவேளை அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கவில்லை, சசிகலா புஷ்பா பொய் சொல்கிறார் என்றால், அதையும் விளக்க வேண்டிய பொறுப்பில் உள்ளார் தம்பிதுரை.