ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியா.. விரைவில் அறிவிப்பு
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்றார்.
அங்கு சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
மீனவர் மீதான தாக்குதலை மக்கள் நலக் கூட்டியக்கம் வன்மையாக கண்டிக்கிறது. போராடும் மக்களுக்கு உரிய பதிலை அளிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். துப்பாக்கி சூடு இனி நடக்காது என்ற உத்தரவாதத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும்.
ஆந்திராவில் தமிழர்கள் சித்ரவதை
அதே போன்று ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் மோசமான முறையில் சித்ரவதை செய்யப்படுவதும் வன்மையான கண்டத்திற்குரியது. தமிழக அரசு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து தமிழர்களை மீட்க வேண்டும்.
நடவடிக்கை என்ன?
மக்கள் நலக் கூட்டியக்கத்தைச் சேர்ந்த 3 கட்சிகளும் விரைவில் கூடி பேச உள்ளோம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்தும், தாமிரபரணியில் கோக், பெப்சி நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பது குறித்து உயர்நீதிமன்றம் அளித்திருக்கின்ற அனுமதி குறித்தும், ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்படுவது குறித்தும் பேசி அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்று அறிவிக்க உள்ளோம்.
ஆர்.கே. நகர் ஆலோசனை
ஆர்.கே. நகரில் வெற்றி வாய்ப்பை மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் நலக் கூட்டியக்கம் போட்டியிடுவது என்று முடிவு செய்திருக்கிறோம். இரண்டொரு நாட்களில் 3 கட்சிகளும் பேசி வேட்பாளரை முடிவு செய்வோம். யார் வேட்பாளர் என்பதை விரைவில் அறிவிப்போம் என்று திருமாவளவன் கூறினார்.
திருமாவளவன் போட்டி?
இதனிடையே, ஒடுக்கப்பட்ட மற்றும் இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் ஆர். கே. நகர் தொகுதியில் நீங்கள் போட்டியிடப் போவதாக செய்திகள் வெளியாகிறதே என்று செய்தியாளர் ஒருவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு, அது இன்னும் முடிவாகவில்லை என்றும் விரைவில் யார் என்பதை அறிவிப்போம் என்றும் திருமாவளவன் பதில் அளித்தார்.