இந்த நெனப்பு விஜயகாந்த்துக்கு நல்லதா.. கெட்டதான்னே தெரியலையே....!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த்துக்கு பதவிதான் பிரதான நோக்கம்.. ஆரம்பத்திலிருந்தே அவர் பதவிக்குத்தான் ஆசைப்பட்டு வருகிறார்.. பதவிதான் அவரது ஒரே குறியாகவும் உள்ளது. அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும், அனைவரையும் சினிமா பாணியில் ஆட்டிப்படைக்க வேண்டும்.. இதுதான் முதல் மற்றும் முக்கிய லட்சியமாக அவரிடம் உள்ளது. அதுதான் உண்மை என்பதை விஜயகாந்த்தின் சமீபத்திய செயல்பாடுகள் நிரூபிப்பதாக உள்ளன என்று கூறுகிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

மக்களுக்காக.. என்பதெல்லாம் அவர் வெறுமனே வாய் வார்த்தைக்காக சொல்லியது, சொல்வது என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த கால விஜயகாந்த்தின் அரசியல் செயல்பாடுகளைக் கூர்ந்து பார்த்து வருபவர்களுக்கு இது நன்றாக தெரியும். புரியும் என்பது இவர்களின் வாதம். இப்போது ஜெயலலிதா ஊரில் இல்லாத நேரத்தில் படு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறாராம் விஜயகாந்த். உடம்பு சரியில்லை என்று வீட்டோடு இருந்த விஜயகாந்த், கட்சியினருடன் ஆலோசனை, கவர்னருடன் சந்திப்பு, அறிக்கை விடுவது என்று திடீர் தெம்போடு காணப்படுகிறார்.

இது தேமுதிகவினருக்கு வேண்டுமானால் உற்சாகத்தைக் கொடுக்கலாம். ஆனால் விஜயகாந்த்தின் உள்ளூர எண்ணத்தைப் புரிந்தவர்களுக்குத்தான் அவரது உள்நோக்கம் தெரியும் என்கிறார்கள்.

மீண்டும் தீவிரமாகியுள்ள பதவி ஆசை

மீண்டும் தீவிரமாகியுள்ள பதவி ஆசை

விஜயகாந்த்துக்கு ஜெயலலிதா சிறைக்குப் போனதுமே பதவி ஆசை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விட்டதாம். இதுதான் நாம் பிழைக்க சரியான சான்ஸ் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டாராம் அவர்.

இதை விட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது

இதை விட்டா நல்ல சான்ஸ் கிடைக்காது

இப்போது ஜெயலலிதா சிறைக்குப் போய் விட்டார். அவர் வெளியே வருவது கஷ்டம். அப்படியே வந்தாலும், மேல் கோர்ட்டுகளில் அப்பீல் செய்தாலும் அவருக்கு சிறை தண்டனை குறையாது. எப்படியும் அடுத்த 10 வருஷத்துக்கு அவரால் தேர்தலில் நிற்கவும் முடியாது. எனவே இந்த சான்ஸை பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும், முதல்வராகி விட வேண்டும் என்று நினைக்கிறாராம் விஜயகாந்த்.

திமுகவி்லும் பலவீனம்

திமுகவி்லும் பலவீனம்

திமுக தரப்பிலும் பலவீனமாக உள்ளனர். 2ஜி வழக்கில் கனிமொழி உள்ளிட்டோருக்கு சிக்கல் நீடிக்கிறது. அழகிரியும், ஸ்டாலினும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதிக்கும் வயதாகி விட்டது. எனவே இவர்களையும் சமாளித்து சரித்து விட்டால் அடுத்து நானே ராஜா, நானே மந்திரி என்று சினிமா பாணியில் கனவு கண்டு கொண்டிருக்கிறாராம் விஜயகாந்த்.

அண்ணனுக்கு ஆசை வந்துருச்சு டோய்!

அண்ணனுக்கு ஆசை வந்துருச்சு டோய்!

விஜயகாந்த்தின் இந்த ஆசையைப் பார்த்து தொண்டர்களுக்கும் குஷியாகி விட்டதாம். அண்ணனுக்கு ஆசை இருக்கும் வரைதான் நமது பிழைப்பும் ஓடும் என்பதால் அவர்களும் விஜயகாந்த்துக்கு முடிந்தவரை கொம்பு சீவி விட்டுக் கொண்டுள்ளனராம்.

இனி தனிக் கூட்டணிதான்

இனி தனிக் கூட்டணிதான்

ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு வரை அடுத்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அல்லது திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறலாம் என்ற கருத்து இருந்து வந்தது. ஆனால் விஜயகாந்த் இப்போது மாற்றி யோசிக்கிறாராம்.

நான்தான் முதல்வர் வந்தா வாங்க..!

நான்தான் முதல்வர் வந்தா வாங்க..!

வரும் தேர்தலில் எப்படியும் ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலைதான் இருக்கும். எனவே நமது தலைமையில் தனிக் கூட்டணி அமைத்து திமுக, அதிமுகவுக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்தால் நமக்கு மக்கள் அத்தனை ஓட்டையும் போட்டு ஜெயிக்க வைத்து விடுவார்கள், நாம் ஈஸியாக முதல்வராகி விடலாம்.. என்ற ரொம்ப சுலபமாக ஒரு பெரிய கணக்கைப் போட்டு அவரே விடையும் கண்டு பிடித்து விட்டாராம்.

பட்டப் பகலில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு!

பட்டப் பகலில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு!

ஆனால் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களோ விஜயகாந்த்தின் இந்த நினைப்பையும், கணக்கையும் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்களாம். விஜயகாந்த்துக்கு தமிழக அரசியலும் புரியவில்லை, மக்கள் மனதையும் கணிக்கத் தெரியவில்லை. அதை விட முக்கியமாக ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் இவர் இன்னும் கூட சரிவர புரிந்து கொள்ளவில்லை. வழக்கம் போலவே தப்புக் கணக்கு போட ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள்.

கருணாநிதி அமைதி ஏன்...

கருணாநிதி அமைதி ஏன்...

திமுக தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா கைது விவகாரத்தில் நீண்ட நாட்கள் மெளனம் காத்தது அவரை நன்கு அறிந்த, தெரிந்த, புரிந்தவர்களுக்கு மட்டுமே ஏன் என்று தெரியும். கருணாநிதியை சரியாக எடை போடத் தெரிந்தவர்கள் என்று இன்று வரை யாரும் பிறக்கவே இல்லை என்பதே உண்மை. இன்று உள்ள அத்தனை அரசியல் தலைவர்களும் சிந்திப்பதை விட பல மடங்கு வேகமாக, பல மடங்கு முன்னேற்றமாக சிந்திக்கக் கூடியவர் கருணாநிதி. எனவே அவரது அமைதிக்குப் பின்னர் ஆழ்ந்த யோசனையும், திட்டங்களும் கண்டிப்பாக அடங்கியிருக்கும் என்பதை முதலில் விஜயகாந்த் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெயலலிதாவைக் குறைத்து மதிப்பிடக் கூடாது

ஜெயலலிதாவைக் குறைத்து மதிப்பிடக் கூடாது

அதேபோலத்தான் ஜெயலலிதாவும். இதற்கு முன்பும் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவர்தான். சிறைக்கும் போனவர்தான். பதவியையும் இழந்தவர்தான். ஆனால் அத்தனையிலிருந்தும் அவர் மீண்டு வந்தார். திமுக உள்ளிட்ட கட்சிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டினார். அப்போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பலமாக இல்லை. எனவே இந்த அளவுக்கு அப்போது பரபரப்பு ஏற்படவில்லை. ஆனால் இப்போது அப்படி இல்லை, எனவே பரபரப்பு கூடியுள்ளது. ஆனால் கருணாநிதியைப் போலத்தான் ஜெயலலிதாவும் ஒரு ஃபைட்டர். அவ்வளவு சீக்கிரமாக தோற்றுப் போவதை அவர் விரும்ப மாட்டார், விடவும் மாட்டார்.

மனக் கணக்கு போட்டா எப்படி

மனக் கணக்கு போட்டா எப்படி

இப்படி இந்த இரு பெரும் தலைவர்களும் முற்றிலும் நீர்த்துப் போகாத நிலையில் அவர்களின் இயக்கம் இன்னும் வலுவாக உள்ள நிலையில் மக்கள் மனதில் இந்த இருவர் குறித்தும் முழுமையாக எதிர்ப்பு அலை வீசாத நிலையில் விஜயகாந்த் மனக் கணக்குப் போடுகிறாரே, அது எப்படி சாத்தியம் என்று விவரம் தெரிந்தவர்கள் கேட்கிறார்கள்.

வழக்கம் போல காலம்தான் பதில் சொல்ல வேண்டும்... விஜயகாந்த்தின் நினைப்பு அவருக்கு நல்லதா, கெட்டதா என்பதை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+