மோடி பிரதமரானால் வரவேற்பேன்: மு.க. அழகிரி அதிரடி பேட்டி
மதுரை: திமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலர் மு.க. அழகிரி அடுத்தடுத்து தெரிவித்து வரும் கருத்துகளும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் சஸ்பென்ஸ் ஆகவே இருந்து வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனாகிய மு.க. அழகிரி தமது சகோதர் மு.க.ஸ்டாலின் வசம் கட்சி செல்வதில்லை விரும்பவில்லை. இதனால் ஸ்டாலினின் அத்தனை நிலைப்பாட்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இந்நிலையில் சற்று அமைதியாக இருந்த மு.க. அழகிரி திடீரென டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அத்துடன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ஜெயலலிதாவை பாராட்டினார். திமுகவின் 39 தொகுதி வேட்பாளர்களையும் மாற்ற வேண்டும் என்றார்.
இதனிடையே மதுரையில் தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் மு.க. அழகிரி. இந்த கூட்டத்தில் தனிக்கட்சி எதுவும் தொடங்கப்போவதில்லை என்று கூறினார். அக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, நாட்டில் மோடி அலை வீசுவதாக நான் நம்புகிறேன். மோடியைப் பொறுத்தவரையில் நல்ல நிர்வாகி என்பதை ஏற்கனவே நான் தெரிவித்திருக்கிறேன். அவர் பிரதமரானால் நான் வரவேற்பேன் என்றார்.
கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசி வரும் மு.க.ஸ்டாலின், நரேந்திர மோடியை ஜெயலலிதா விமர்சிக்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் விமர்சிப்பதால் அதற்கு நேர் எதிராக மு.க. அழகிரியோ நரேந்திர மோடியை ஆதரித்து கருத்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications