இன்னும் 6 மாதத்தில் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம்?
மறைந்த முதுபெரும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு இன்னும் 6 மாதத்தில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன,
சென்னை: மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டும் மணிமண்டபம் எழுப்பும் பணி தொடங்கப்படாமலேயே உள்ளது. அதற்கான வேலைகள் தற்பொது தொடங்கியுள்ளதாகவும் இன்னும் 6 மாதத்தில் மணிமண்டபம் கட்டி முடிக்கப்படும் என்றும் கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் தலை சிறந்த நடிகராகக் ரசிகர்களால் கொண்டாடப்படும் சிவாஜி கணேசன் கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி காலமானார். அவர் மறைந்து 5 ஆண்டுகள் கழித்து, சென்னை மெரினாவில் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கருணாநிதி 8 அடி உயரத்தில் வெண்கல சிலையைத் திறந்து வைத்தார்.
ஆனால், அதற்கும் முன்னதாகவே 2002ஆம் ஆண்டு நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க, நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கிக் கொடுத்தது. ஆனாலும், மணிமண்டபம் கட்டப்படாமல், அதற்கென ஒதுக்கப்பட்ட இடமும் குப்பைமேடு போல காட்சியளித்தது.

மணிமண்டபம் கோரி உண்ணாவிரதம்
இந்நிலையில், தமிழ்நாட்டின் கலை மற்றும் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஆளுமையாக திகழ்ந்த சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்த சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவைத் தலைவர் சந்திரசேகர், மணிமண்டபம் கட்டும் பணியில் நடிகர் சங்கம் அக்கறை காட்டாததைக் கண்டித்தும், அரசே இந்தப் பணியை ஏற்க வேண்டும் என்று கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தினார்.

பொறுப்பை ஏற்றது அரசு
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பாக, தமிழக சட்டமன்றத்தில், 110 விதியின் கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

ஏமாந்த சிவாஜி ரசிகர்கள்
தமிழக சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்போடு நின்றுவிட்டது சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள். மண்டபம் அமைப்பதற்கான பணிகள் எதையும் அப்போதைய அரசு மேற்கொள்ளவில்லை. இதனால் சிவாஜி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மீண்டும் பணிகள் தொடக்கம்
இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கும் திட்டம் தொடர்பான பணிகள் வேகமெடுத்துள்ளன. சிவாஜி மணிமண்டபம் கட்டுவதற்கான டெண்டர் விடப்பட்டு தனியார் கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் தற்போது பணியை தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த 6 மாதத்திற்குள் சிவாஜி மணிமண்டபம் கட்டி முடிக்கப்படும் என்று தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications