பொறுத்திருங்கள், 2 மாதங்களில் நடவடிக்கை பாயும்...'பன்ச்' வைக்கும் மு.க.அழகிரி
ஆரணி: இன்னும் இரண்டே மாதங்களில் என்னை நீக்கியவர்கள் மீது நடவடிக்கை பாயும். அது தலைவராக இருந்தாலும் சரி, அவருடைய நண்பர்களாக இருந்தாலும் சரி. நடவடிக்கை கண்டிப்பாக உண்டு. அது என்ன நடவடிக்கை என்பது குறித்து இப்போது சொல்லமாட்டேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
ஆரணிக்கு வந்த அழகிரி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திமுகவில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் என்னை நீக்கியதற்கான நோட்டீஸ் அனுப்பவில்லை. நோட்டீஸ் வழங்கி விட்டதாக கருணாநிதியிடம் தவறான தகவல் தெரிவித்து நீக்கியிருக்கிறார்கள். திமுகவில் இருந்து என்னை திட்டமிட்டு வெளியேற்றி இருக்கிறார்கள்.
என்ன வெளியேற்றுவதற்கு காரணமானவர்கள் மீது 2 மாதங்களில் வேறுவிதமான நடவடிக்கை பாயும். அது தலைவராக இருந்தாலும் சரி, அவருடைய நண்பர்களாக இருந்தாலும் சரி நடவடிக்கை பாயும். எந்தவிதமான நடவடிக்கை என்பது பற்றி இப்போது கூறமுடியாது.
நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை ஆதரவாளர்களுடன் கலந்து பேசித்தான் அறிவிப்பேன் என்றார் அழகிரி.
அவருடன் அவரது மகன் துரை தயாநிதி, முன்னாள் மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன், ஜே.கே.ரித்தீஷ் எம்.பி ஆகியோரும் வந்திருந்தனர்.