அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு- பதறும் பொதுமக்கள்
நெல்லை மாவட்ட ஊராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் இருந்த 200க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்களை அதிகாரிகள் துண்டித்தனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நெல்லை: ஊராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் இருந்த 200க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்களை அதிகாரிகள் துண்டித்தனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த சிலர், கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு என்று கூறி பல்வகை ரசீதுகளில் குடிநீர் இணைப்புக்காக பணம் வசூல் செய்துள்ளனர்.
இதன் மூலம் சுமார் 200க்கும் மேற்பட்ட புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளை கலெக்டர் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக வழங்கியுள்ளனர். ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் அனுமதியின்றி கூடுதலாக குடிநீர் இணைப்பு வழங்கியதால் முறையாக ஊராட்சியிடம் அனுமதி பெற்ற பொது மக்களும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர். இதனால் அடிப்படைத் தேவையான குடிநீருக்கு என்ன செய்வதென்ற குழப்பத்தில் பொதுமக்கள் ஆழ்ந்துள்ளனர்.