சாணிபவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்ற தாய்… காப்பாற்றிய குழந்தைகள்
கோவை: கோவை அருகே சாணிபவுடர் குடித்து தற்கொலை செய்ய முயன்ற தாயை அவரது இரண்டு குழந்தைகள் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கருமத்தப்பட்டி பகுதியைசார்ந்தவர் நடராஜ் இவர் கடந்த 2000ஆம் ஆண்டில் உஷா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சதீஷ், பிரகாஷ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சதீஷ் ஏழாம் வகுப்பும் பிரகாஷ் ஆறாம் வகுப்பும் படிக்கிறார்கள்.
உஷாவின் கணவர் நடராஜுக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. இதனால் இவர்களின் வாழ்வில் தினசரி தகராறுதானாம்.
குடி பழக்கத்தை மட்டும் எந்தச் சூழ்நிலையிலும் நடராஜால் விட முடியவில்லை. இந்நிலையில் ஞாயிறன்று நன்றாகக் குடித்து விட்டு வந்து மனைவி உஷாவிடம் தகராறு செய்தார் நடராஜ். பிள்ளைகள் எவ்வளவோ தடுத்தும் கெஞ்சியும் உஷாவை அடித்து உதைத்துக் கொடுமைபடுத்தினார். மேலும் ஆத்திரம் தீராமல் வீட்டில் உள்ள பொருட்களையும் தனது போனையும் போட்டு உடைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
உஷா தனது குழந்தைகளுடன் நடராஜை இரண்டு நாட்களாக எங்குத் தேடியும் பலனளிக்கவில்லை. நடராஜ் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. இதனால் காலையில் கண்விழித்த பிள்ளைகள் சதிஷும் பிரகாஷும் அம்மாவை எழுப்பினர். அவர் கண் விழிக்கவில்லை. பதறி துடித்த பிள்ளைகள் அக்கம் பக்கம் உள்ளோரை நாடினர். அம்மாவை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதுள்ளனர் ஆனால் யாரும் உதவிக்கு வரவில்லை.
தவித்த பிள்ளைகள் அருகில் இருந்தவரின் செல்போனை வாங்கி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். உடனடியாகத் தங்கள் தாயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து உஷா உயிர்பிழைத்தார். கண்விழித்த உஷா, இனியேனும் இது போன்ற தவறான முடிவை எடுக்கமாட்டேன் என்று குழந்தைகளை கட்டி அணைத்து அழுதது காண்பவர்களின் கண்களை குளமாக்கியது.
வாழ்வை தொலைத்து உஷா வருந்தினாலும் அவரது பிள்ளை செல்வங்கள் அவருக்கு விழுதுகளாக இருந்து காத்து விட்டனர். இந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இருக்கும் அறிவு அந்த குடிகார தகப்பனுக்கு இல்லாமல் போய்விட்டதே.