கேஸ் சிலிண்டரில் தீ வைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கணவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கேஸ் சிலிண்டரில் தீ வைத்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் அருகே சொக்கலிங்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கோபாலகிருஷ்ணன் கேரளாவில் தங்கியிருந்து பால் கறக்கும் தொழில் செய்து வருகிறார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வார். கடந்த 15 நாடகளுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் ஊருக்கு வந்தார். அன்று முதல் கணவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று இரவு மீ்ண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபாலகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இதனால் மன வேதனை அடைந்த பத்மா வீட்டை உட்புறமாக பூட்டினார். சமையல் அறை சென்று அங்கிருந்த கேஸ் சிலிண்டரின் இணைப்பை தூ்ண்டித்து அதனை படுக்கை அறைக்கு எடுத்து சென்றார். அங்கு அவரது மகள் மாலதி, மஞ்சு இருந்தனர். பின்னர் அவர் கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தீ வைத்தார்.
தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. தீ வெப்பம் தாங்காமல் குழந்தைகள் அலறினர். இதில் மூன்று பேரும் தீயில் கருகி பலியாகினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
வீட்டில் இருந்து ஓரே புகை மூட்டமாக வரவே அவர்கள் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் டிஎஸ்பி மாதவன், இனஸ்பெக்டர் விஜயகுமார், பிரபாகரன், சப்-இன்ஸ்பெக்டர் பவுல் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அங்கு எரிந்து கரி கட்டையாக கிடந்த பத்மா மற்றும் குழந்தைகள் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.