கணவரின் செக்ஸ் தொல்லை தாங்காமல் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் குடித்த பெண்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கணவரின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
தூத்துக்குடி முருகேசன் நகரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். டிரைவர். அவரது மனைவி முத்துமீனா(28). அவர்களுக்கு செந்தில் (6), மதிவேல் (3), பிரபு (3 மாதம்) என்ற 3 மகன்கள் உள்ளனர். பிரபு பிறந்த பிறகு மீனா குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். குடிப்பழக்கம் உள்ள முத்துகிருஷ்ணன் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பங்கை மது குடிக்கவே செலவு செய்துவிடுவார்.
மேலும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவார். இது குறித்து மீனா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிப்காட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். உடனே போலீசார் முத்துகிருஷ்ணனை அழைத்து அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மீனாவிடம் முத்துகிருஷ்ணன் தனது ஆசைக்கு இணங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுக்கவே அவரை அடித்து உதைத்துள்ளார்.
மேலும் நேற்று இரவும் இது குறித்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துகிருஷ்ணன் மீனாவை குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டிற்கு செல்லுமாறு மிரட்டியுள்ளார். இதையடுத்து மீனா வீட்டில் இருந்து ஹேர்டையை எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்து தானும் குடித்தார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரிடம் மீனா நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அந்த 4 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில், தனது கணவர் செக்ஸ் தொல்லை கொடுத்ததாலும், அவரது ஆசைக்கு இணங்க மறுத்த தன்னை அடித்ததாலும் இந்த முடிவை எடுத்ததாக மீனா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications