'அப்ரூவர்' ஆகிறார் சிலை திருட்டு வழக்கில் சிக்கி கைதான நிருபர் மாலதி
சென்னை: நான் சிலைத் திருட்டில் ஈடுபட்டு பாவம் செய்து விட்டேன். பணத்துக்கு ஆசைப்பட்டு இவ்வாறு செய்து விட்டேன் என்று சிலைத் திருட்டு வழக்கில் சிக்கி கைதாகியுள்ள பெண் நிருபர் மாலதி போலீஸாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளாராம்.
கோவில் சிலை திருட்டு வழக்கில் சிக்கி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரைப்பட இயக்குநர் வி.சேகர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாலதியை போலீஸார் கைது செய்துள்ளனர். இவரது சகோதரர் ஏற்கனவே கைதாகி விட்டார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மாலதி போலீஸாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் பெரும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தத் தவறை செய்து விட்டதாக கூறியுள்ளார் அவர்.

3 கோவில்களில் சிலை திருட்டு
வந்தவாசி அருகே உள்ள சவுந்தர்யபுரத்தில் இருக்கும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 3 சிலைகளும், வந்தவாசி அருகே உள்ள பையூர் என்ற கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் 3 சிலைகளும் கடந்த ஜனவரி மாதம் திருடப்பட்டன. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே இருக்கும் ராமானுஜபுரத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலிலும் சிவன், பார்வதி சிலைகள் திருட்டுபோனது.

ரூ. 80 கோடி மதிப்பிலான 8 சிலைகள்
ரூ.80 கோடி மதிப்புள்ள இந்த 8 சாமி சிலைகளையும் விற்பதற்காக சென்னை தி.நகருக்கு கொண்டு வந்தபோது, சிலை திருட்டு தடுப்பு போலீசார் சிலைகளை மீட்டனர். இந்த வழக்கில் சினிமா தயாரிப்பு நிர்வாகி தனலிங்கம், சென்னை அரசு அச்சக ஊழியர் கருணாகரன் (மாலதியின் சகோதரர்) ஆகிய இருவரும் முதலில் கைது செய்யப்பட்டனர்.

வி.சேகர் சிக்கினார்
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போதுதான் இந்த சிலைகளை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தது வி.சேகர் எனத் தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

சேகர் கொடுத்த வாக்குமூலத்தில் சிக்கிய மாலதி
சேகரிடம் போலீஸார் நடத்திய விசாரணையின்போது அவர் மாலதி உள்ளிட்ட 4 பேரை கை காட்டினார். இதையடுத்து மாலதி உள்பட நான்கு பேரைப் போலீஸார் பிடித்தனர். இதில் மாலதி நேற்று கைதானார்.

வந்தவாசி மாலதி
போலீஸாரிடம் தற்போது கண்ணீர் மல்க மாலதி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம்: எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ளது. 10வது வகுப்பு வரை படித்துள்ளேன். நான் சென்னை மயிலாப்பூரில் வாழ்கிறேன். எனக்கு திருமணமாகிவிட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். சிறிய பத்திரிகை ஒன்றில் நிருபராக பணியாற்றினேன். இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு உள்ள அரசு அச்சக ஊழியர் கருணாகரன் எனது அண்ணன் ஆவார். எனது அண்ணன் மூலம், சிலை கடத்தல் மன்னன் ஜெயக்குமார் எனக்கு பழக்கமானார்.

சுபாஷ் கபூரைப் பார்த்து ஆசை
சுபாஷ் கபூர் என்பவர் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று விற்று கோடீஸ்வரர் ஆனார் என்ற செய்தி பத்திரிகைகளில் வந்தது. அந்த செய்தியை பார்த்த ஜெயக்குமார் நாமும் சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்திச்சென்று விற்றால் கோடி, கோடியாக சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டினார். மேலும், நாங்கள் இரிடியம் இருப்பதாக ஆசைகாட்டி பணம் பறிக்கும் மோசடி தொழில் செய்து வந்தோம்.

ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தேன்
அதில் போதுமான வருமானம் இல்லாததால், சிலை கடத்தல் தொழிலை தேர்வு செய்தோம். வந்தவாசி அருகே உள்ள பையூர் மற்றும் சவுந்தர்யபுரம் கோவில்களில் உள்ள சாமி சிலைகளை திருடுவதற்கு நான்தான் தேர்வு செய்து, திட்டமிட்டு கொடுத்தேன்.

கும்பலைக் கூட்டி வந்த ஜெயக்குமார்
சிலைகள் திருடுவதில் பலே கில்லாடியான மாரி கும்பலைச் சேர்ந்தவர்களை ஜெயக்குமார்தான் அழைத்து வந்தார். முதலில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ராமானுஜபுரத்தில் இருக்கும் மணிகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சிவன்-பார்வதி சிலைகளை திருடி வரச்சொல்லி மாரி குழுவினரை கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அனுப்பி வைத்தோம். எங்கள் திட்டப்படி அவர்களும் நாங்கள் சொன்ன சிலைகளை திருடி வந்தனர். அதன்பின் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி வந்தவாசி அருகே உள்ள பையூர், சவுந்தர்யபுரம் கோவில்களுக்கு சாமி சிலைகளை திருட அவர்களை அனுப்பி வைத்தோம்.

போலீஸ் அதிகாரியுடன் தொடர்பு
நான் நிருபராக பணியாற்றியதால், போலீஸ் அதிகாரி ரவிச்சந்திரனுடன் எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. அவரையும் சிலை கடத்தல் தொழிலில் சேர்த்துக் கொண்டோம். நான், ஜெயக்குமார், போலீஸ் அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் தனித்தனியாக 2 கார்களில் வந்தவாசி சென்றோம். பையூர், சவுந்தர்யபுரம் கோவில்களிலும் மாரி குழுவினர் 6 சிலைகளை நாங்கள் திட்டமிட்டபடி கச்சிதமாக திருடி வந்தார்கள். அந்த சிலைகளை ஒரு நாள் எனது சொந்த ஊரில் உள்ள கிராமத்து வீட்டில் வைத்திருந்தோம். அதன்பின், அந்த சிலைகளை அங்கிருந்து சினிமா இயக்குநர் சேகர் வீட்டுக்கு கொண்டு வந்து வைத்திருந்தோம். பணத்திற்கு ஆசைப்பட்டு சிலை திருட்டு பாவத்தை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளாராம் மாலதி.

அப்ரூவர் ஆகிறார்
தற்போது அப்ரூவர் ஆக சம்மதித்துள்ளார் மாலதி. எனவே அவர் மூலம் மேலும் பல தகவல்களைப் பெறவுள்ளனர் போலீஸார். விரைவில் அவரை போலீஸ் தரப்பு சாட்சியாக மாற்றி சிலை திருட்டு தொடர்பான முழு நெட்வொர்க்கையும் கண்டுபிடித்து மேலும் பலரைக் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications