சென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை
சென்னை: அடுக்குமாடிக் குடியிருப்பில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளையும் கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழும்பூர் பாந்தியன் சாலையை ஒட்டியுள்ள 9 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் மொத்தம் 61 வீடுகள் உள்ளன. இதன் 3-ஆவது தளத்தில் வசித்து வந்தவர் சாரதா (70). இவர் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர்.
கடந்த ஓராண்டாக இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவரது சகோதரர் மகள் தன்யா நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு துணையாக இருப்பதற்காகவே கேரளாவில் இருந்து சாரதா வந்துள்ளார்.
இந்நிலையில் தன்யா கல்லூரி முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தப்போது சாரதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. காதுகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. அவர் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போயிருந்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் போலீசார் நடத்திய விசாரணையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.