கோட்டை வளாகத்தில் பெண் கொலை, கணவர் தற்கொலை முயற்சி.. போலீஸ் அதிர்ச்சி
சென்னை: மிகுந்த பாதுகாப்புடன் கூடிய சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகப் பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணை மது போதையில் கொன்ற கணவர், தானும் தற்கொலைக்கு முயன்று பின்னர் மீட்கப்பட்டார்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (27). இவர் ஒரு பெயிண்டர். இவரது மனைவி சுவேதா (22). இவர்களுக்கு சுதன் என்ற 3 வயது மகனும், சுஜி என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசித்து வந்த சுரேஷ், சுவேதா தம்பதி வருமானம் போதாததால், வீட்டை வாடகைக்கு விட்டு ரிசர்வ் வங்கி அருகே உள்ள பிளாட்பாரக் குடிசைப் பகுதியில் குடியேறினர். சுரேஷ் மொடாக் குடியர். தினசரி குடிப்பதுதான் இவருக்குப் பிரதானம். போதிய வருமானமும் இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடக்கும்.
நேற்றும் சுரேஷ், சுவேதா இடையே மோதல் வெடித்தது. இருவரும் கடுமையாக சண்டை போட்டுள்ளனர். அப்போது மோதலை வளர்க்க வேண்டாம் என்று கருதிய சுவேதா எழுந்து கோட்டைப் பக்கம் உள்ள பகுதிக்கு போய் விட்டார். ஆனால் பின்னாலேயே வந்த சுரேஷ் மனைவியை தடுத்து நிறுத்தி சண்டை போட்டார். பின்னர் கோபத்தில் சுவேதாவின் கழுத்தை சேலையால் இறுக்கினார். இதில் சுவேதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப் பார்த்த சுரேஷ், அதே சேலையால் மரத்தில் தூக்குப் போட முயன்றார். அதை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து விட்டு ஓடி வந்து சுரேஷை மீட்டனர். போலீஸார் விரைந்து வந்து சுவேதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் நடந்த இடம் தலைமைச் செயலகம், சட்டசபை ஆகியவை அடங்கிய புனித ஜார்ஜ் கோட்டைப் பகுதியில் நடந்துள்ளது. இது போலீஸாருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தை போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications