ஏட்டுக்களின் செக்ஸ் டார்ச்சர்... பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை... கடைசி கடிதத்தால் பரபரப்பு
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காயத்ரி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இரண்டு ஏட்டுக்கள் கொடுத்த செக்ஸ் டார்ச்சரால்தான் இவர் தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
காயத்ரி தாராபுரம் டிஎஸ்பி ஜெரீனா பேகத்திடம் உதவியாளராக இருந்து வந்தார். இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதலில் ஜெரீனா பேகம் திட்டியதால்தான் அவர் தற்கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின. காயத்ரியின் கணவரும் அதுபோலவே புகார் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது முற்றிலும் வேறு காரணத்துக்காக காயத்ரி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தற்கொலைக்கு முன்னராக, தனது தோழி மூலமாக ஜெரீனா பேகத்துக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார் காயத்ரி. அந்தக் கடிதத்தில் அவர் சில பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் காயத்ரி கூறியுள்ளதாவது:-
3 மாதத்துக்கு முன்னால் நான் பணக்கஷ்டத்தில் இருந்த போது, ஏட்டையா ஒருவரிடம் (பெயரை குறிப்பிட்டு) வட்டிக்கு ரூ.5 ஆயிரம் பணம் வாங்கினேன். அந்த பணத்தை என்னால் திருப்பி கொடுக்க முடியவில்லை.
ஒரு நாள் கோர்ட் அருகில் வைத்து என்னிடம் பேசிய அவர், பணம் எல்லாம் வேண்டாம், ஒரு நாள் என்னோடு இரு என்று கூறினார். இதன் பின்னர் வேறு ஒரு நாள் குடிபோதையில் என்னை பலவந்தப்படுத்தி கெடுத்து விட்டார்.
இதன் பின்னர் அலங்கியம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் இன்னொரு போலீஸ் ஏட்டுவின் பெயரை சொல்லி அவருடன் சென்றால் ஒவ்வொரு மாதமும் ரூ. 5 ஆயிரம் தருவதாக கூறுகிறார் என தெரிவித்தார். அவரது பேச்சை கேட்டு அலங்கியம் போலீஸ் ஏட்டுவும் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்.
என்னுடன் உல்லாசம் அனுபவிக்க முயற்சி செய்தார். எனது சாவுக்கு போலீஸ் ஏட்டுகள் இருவருமே காரணம்' என்று காயத்ரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏட்டுக்கள் கொடுத்த செக்ஸ் டார்ச்சரால்தான் காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக தற்போது வெளியாகியுள்ள தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.