கணவனை சேர்ந்து வையுங்கள், அல்லது தற்கொலைக்கு அனுமதியுங்கள்: கலெக்டரிடம் பெண் மனு
திருவாரூர்: கணவன் பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த பெண் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த அனிதா (31) கடந்த 2007ம் ஆண்டு சண்முகம் என்பவரை திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளது. இந்நிலையில், அனிதாவை சண்முகம் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஒரே மகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படும் அனிதா, விரக்தியால், தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்கும்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கலெக்டரிடம் அளித்த மனு:
எனது கணவர் சண்முகம் தற்போது எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதுவரை வீட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து நன்னிலம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வயதான தந்தையின் ஆதரவில் வாழ்ந்து வருகிறேன்.
வாழ வழியின்றி நிர்கதியாக இருக்கும் எனக்கும், எனது மகளுக்கும் எதிர்காலம் இருப்பதாக கருதவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எனது மகளின் எதிர்காலம் கருதி கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும். முடியாதபட்சத்தில் என்னையும், என் மகளையும் கருணை கொலை செய்ய வேண்டும் அல்லது தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதேபோல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரனை நேரில் சந்தித்து அனிதா மனு அளித்தார்.












Click it and Unblock the Notifications