ஒரே நேரத்தில் 2 கள்ளக்காதல்.. பெண்ணுக்குத் தீவைத்த வாலிபர்.. இருவரும் கருகி பலி!
சென்னை: ஒரே நேரத்தில் தன்னுடனும், இன்னொருவருடனும் கள்ளக்காதலில் திளைத்த பெண் மீது ஆத்திரம் கொண்டார் வாலிபர். எவ்வளவு சொல்லியும் அடங்காத அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தார். அப்போது அந்தப் பெண், தனக்கு தீவைத்த காதலனையும் கட்டிப் பிடித்ததில் இருவருமே தீயில் கருகி பலியானார்கள்.
சென்னை புதிய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் 34 வயதான தங்கமலர். இவரது கணவர் பெயர் பிரகாஷ். இவர் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தவர். சில மாதங்களுக்கு முன்பு இவரைக் கொலை செய்து விட்டனர். இவரைக் கடந்த ஆண்டு சென்னை அரசு மருத்துவமனையில் வைத்து ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்றது.
அதன் பின்னர் தன்னை விட நான்கு வயது இளையவரான ராஜா என்பவருடன் தங்கமலர் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இருவரும் நெருக்கமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தங்கமலருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கும் இடையே தொடுப்பு ஏற்பட்டுள்ளது.
கஜேந்திரன் வந்ததும், அவர் மீதான மோகத்தில், ராஜாவை சரியாக கண்டு கொள்ளவில்லையாம் தங்கமலர். இதனால் ராஜா கோபமடைந்தார். கஜேந்திரனை விட்டு விடு, என்னுடன் மட்டும் இரு என்று கண்டித்துள்ளார். ஆனால் தங்கமலர் கேட்கவில்லை. அதெல்லாம் முடியாது, எனக்கு கஜேந்திரனும் வேண்டும், நீ என்ன எனக்குத் தாலி கட்டிய புருஷனா, தேவையில்லாமல் இதில் தலையிடாதே என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சம்பவ தினத்தன்று மலரைப் பார்க்க வந்தார் ராஜா. அப்போது மீண்டும் மோதல் வெடித்தது. உடனே தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தங்க மலர் மீது ஊற்றினார். இப்போது சொல், கஜேந்திரனை விட்டு விடுகிறேன் என்று, இல்லாவிட்டால் கொளுத்தி விடுவேன் என்று மிரட்டினார். ஆனால் அப்போதும் மலர் உறுதியாக இருக்கவே, கோபமடைந்த ராஜா, தீவைத்து விட்டார்.
இதில் மலர் அலறித் துடித்தார். இதைப் பார்த்துப் பயந்து போன ராஜா அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் தங்க மலர், ராஜாவையும் கட்டிப் பிடித்து நகர விடாமல் செய்து விட்டார். இதில் இருவரும் தீக்காயமடைந்து துடித்தனர்.
உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் போலீஸாரிடம் நடந்தது குறித்து வாக்குமூலம் அளித்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி முதலில் மலரும், பின்னர் ராஜாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.