கொள்ளையரிடம் சிக்கி பறிபோன இன்னும் ஒரு பெண்ணின் உயிர்.. வேலூர் எஸ்.ஐ. செல்வாம்பாள் மரணம்!
வேலூர்: சென்னை பட்டினப்பாக்கத்தில் கொள்ளையர்களால் விபத்தை சந்தித்து ஒரு பெண் உள்பட 2 பேர் பலியாகியுள்ள நிலையில், அதேபோல கொள்ளையர்களால் விபத்துக்குள்ளாக்கப்பட்டு படுகாயமடைந்து கோமாவில் இருந்து வந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் செல்வாம்பாள் என்கிற செல்வி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் செல்வாம்பாள். 40 வயதான இவர் ஆற்காடு டவுன் போலீஸில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். வேலூர், கோட்டையில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில், காவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து வந்த பிரிவிலும் இருந்தவர்.

கடந்த ஏப்ரல் 10ம் தேதி, வேலூரில் இருந்து அணைக்கட்டிற்கு செல்வாம்பாள் பைக்கில் சென்றார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த கொள்ளையர்கள், செல்வாம்பாளின் பைக் மீது மோதி அவரை கீழே தள்ளினர். இதில் காயமடைந்தார் செல்வாம்பாள். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர்.
தாலியைக் காப்பாற்ற கடுமையாக போராடினார் செல்வாம்பாள். கூச்சல் போட்டு கத்தினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் திருடர்கள் வெறும் இரண்டரை பவுன் தாலி துண்டுடன் தப்பி விட்டனர். ஆனால் படுகாயமடைந்த நிலையில் செல்வாம்பாள், பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் தானே நேரில் போய் புகார் கொடுத்தார். புகாரைப் பதிவு செய்த போலீஸார் வழக்கம் போல ரப்பராக இழுத்தடித்து வந்தனர்.
இந்த நிலையில் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டதால் செல்வாம்பாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமடைந்து அவர் கோமாவுக்குப் போய் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications