அதிகாரிகள் நெருக்கடி... தூக்கமாத்திரை சாப்பிட்ட பெண் வி.ஏ.ஓ: இது தற்கொலை முயற்சி வாரம்!
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே தேவத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்டாட்சியர், துணை வட்டாட்சியரின் பணி நெருக்கடி காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தமிழ்ச்செல்வியின் தந்தை வெள்ளைச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக, அதிகாரிகள், ஊழியர்களின் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதனால், அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது.

திருவாரூரில், ஒரு அரசு அலுவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமும், கோவையில், ரேசன் கடை ஊழியர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவமும் நேற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அலைகள் அடங்குவதற்குள் ஒட்டன்சத்திரம் அருகே கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை பற்றவைத்துள்ளது.
பெண் வி.ஏ.ஓ தமிழ்செல்வி
ஒட்டன்சத்திரம் அருகே தேவத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் தமிழ்ச்செல்வி. இவர் இன்று காலையில் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனையறிந்த பெற்றோர் உடனடியாக தமிழ்செல்வியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதிகாரிகள் நெருக்கடி
வட்டாட்சியர், துணை வட்டாட்சியரின் பணி நெருக்கடி காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தமிழ்ச்செல்வியின் தந்தை வெள்ளைச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரேசன் ஊழியர் தற்கொலை முயற்சி
இதனிடையே நேற்று கோவை, மருதமலை ரோடு, கல்வீரம்பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 45 தூக்கமாத்திரையை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்தார். அவரை காப்பாற்றிய உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பணிமாற்றம்
சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில், அளவையாளராக பணியாற்றி வரும் சக்திவேல், கடந்த, 18 ஆண்டுகளாக, சுக்கரவார்பேட்டை பட்டுக்கார நூல் சந்து கிளை ரேஷன் கடையில் பணியாற்றி வந்துள்ளார். சில நாட்களுக்கு முன், கூட்டுறவு சங்கத்தின் சிங்காநல்லூர் கிளைக்கு அவர் மாற்றப்பட்டார். நேற்று காலை, சுக்ரவார்பேட்டை, பசுவண்ணன் கோவில் அருகே, 16 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு, சக்திவேல் தற்கொலைக்கு முயன்றார். உடனே, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சக்திவேலுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. கடிதத்தை கைப்பற்றி, ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை நடந்த தற்கொலைகள்
நெல்லையில், வேளாண்மைத் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சியில், அரசு பொது மருத்துவமனை ஆர்.எம்.ஓ., நேரு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சென்னை, எண்ணூரில் ரேஷன் கடை ஊழியர் இளங்கோ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்; நங்கநல்லூரில், ரேஷன் கடை ஊழியர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கடந்த இரு தினங்களில் மட்டும் மூன்று அரசு ஊழியர்கள் தற்கொலை முயற்சி செய்துள்ளனர் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெருக்கடியா? மிரட்டலா?
இதுபோன்ற சம்பவங்கள், உயர் அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்களின் நெருங்கிய வட்டாரங்களில் வரும் நெருக்கடியால் தான் நடப்பதாக கூறப்பட்டாலும், உயரதிகாரிகளை மிரட்டும் ஆயுதமாகவும் இந்த தற்கொலை முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications