"சுந்தரா டிராவல்ஸ்" ராதாவிடமிருந்து கணவரை மீட்டுத் தாருங்கள்’... அதிமுக பிரமுகரின் மனைவி கதறல்!
சென்னை: சுந்தரா டிராவல்ஸ் நடிகை ராதாவிடம் இருந்து தனது கணவரை மீட்டுத்தரக் கோரி சென்னையைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் உமாதேவி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் அவர், சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த ராதா தனது கணவரை தன்னிடம் இருந்து பிரிக்கப் பார்ப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

போலீசில் புகார்...
மேலும், அந்த மனுவில் அவர், "சுந்தரா டிராவல்ஸ் என்ற படத்தில் நடித்துள்ள நடிகை ராதா என்பவர், எனது கணவரை, என்னிடம் இருந்து பிரிக்கப்பார்க்கிறார். அவர் மீது ஏற்கனவே மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் புகார் மனுக்கள் கொடுத்து உள்ளேன். போலீசார் விசாரணை நடத்தி, ராதாவை எச்சரித்து அனுப்பினார்கள்.

போன் மூலம் தொல்லை...
அதன்பிறகு என் கணவர் எங்களோடுதான் இருந்தார். ஆனால் ராதா என் கணவருக்கு அடிக்கடி போன் செய்து என் குடும்பத்தை நிம்மதியாக இருக்க விட மறுக்கிறாள்.

கொலை மிரட்டல்...
எனது கணவர் நல்லவர். அவரை என்னிடம் இருந்து நடிகை ராதா பிரித்து விடுவாரோ, என்ற பயம் உள்ளது. எனக்கு போனில் அடிக்கடி பேசி, ராதா கொலை மிரட்டல் விடுக்கிறார்.

எஸ்.எம்.எஸ்...
என் மகளையும், என்னையும் அவர் மிரட்டுகிறார். இதுதவிர நேற்று முன்தினம் இரவு ஒரு நபருடன் என்னை இணைத்து தகாத வார்த்தைகளால் திட்டி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

மீட்டுத் தாருங்கள்...
இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ராதா என்னையும் என் பிள்ளைகளையும் மிரட்டுவதால் 4 நாட்களாக என் மகள் கல்லூரிக்கு செல்லவில்லை. எனவே ராதாவிடம் இருந்து எங்களை காப்பாற்றி அவளிடம் இருந்து என் கணவரை மீட்டு தாருங்கள்" என உமாதேவி குறிப்பிட்டுள்ளார்.

காணவில்லை...
மேலும், "நேற்றிரவு முதல் என் கணவரைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது" என உமாதேவி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பிரமுகர்...
உமாதேவின் கணவர் முனிவேல் அதிமுகவை சேர்ந்தவர் என்றும் அவர் தற்போது கோடம்பாக்கம் வட்ட துணை செயலாளராக உள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுப்பு...
ஆனால், தன் மீதான இந்தப் புகாரை நடிகை ராதா மறுத்துள்ளார். ஏற்கனவே கடந்த 2013ம் ஆண்டு ராதா பைசூல் என்ற தொழில்அதிபர் ஒருவர் மீது புகார் மனு கொடுத்திருந்தார்.

மோசடி...
அந்த புகார் மனுவில், பைசூல் தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பலமுறை உடல்ரீதியான தொடர்பு வைத்துக்கொண்டதாகவும், இருவரும் கணவன், மனைவி போல ஒரே வீட்டில் கடந்த 6 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் கூறியிருந்தார். மேலும், தன்னை ஆபாசமாக அவர் படம் எடுத்து வைத்துள்ளதாகவும் ராதா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications