தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஏராளமான பெண்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி: நச்சுப்புகையை கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஏராளமான பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மற்றும் அதையொட்டிய பகுதிகளின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கம் செய்யப்படவிருப்பதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி அதிகாலை ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து வெளியான சல்பர்டை ஆக்சைடு காற்றில் கலந்தது. இந்த விஷக்காற்றை சுவாசித்த மாநகர மக்கள் கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளானார்கள்.
லயன்ஸ் டவுன், சண்முகபுரம், ரோச் காலனி, மடத்தூர், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மரம், பூச்செடி-கொடிகள் விஷக்காற்றின் தாக்கத்தால் கருகின.
நஞ்சு நிறைந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது தூத்துக்குடி மாவட்ட மக்களின் வலியுறுத்தல். கட்சி, மதம், இன வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களும் இதில் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட கடந்த 22 ஆண்டுகளில் பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. 1994 முதல் 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர், 13 பேர் இறந்துள்ளனர். வெளியில் தெரியாமல் பல இறப்புகள் மூடி மறைக்கப்பட்டு விட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்பு கடையடைப்பு போராட்டமும், பிரம்மாண்ட பேரணியும் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications