வேண்டாம் வேண்டாம் டாஸ்மாக் வேண்டாம் - கோவில்பட்டியில் பெண்கள் முற்றுகை
கோவில்பட்டி பகுதியில் மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி: கோவில்பட்டி பகுதியில் மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் செயல்பட்டு வந்த 16 டாஸ்மாக் கடைகள் கோர்ட் உத்தரவுப்படி மூடப்பட்டன. இதனால் மூடப்பட்ட கடைகளை வேறு இடத்தில் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் இடம் தேடி வருகிறது. இருப்பினும் ஊருக்குள் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தற்போது கோவில்பட்டியில் கடையூர் ரோடு, பாண்டவர்மங்கலம், மந்தி தோப்பு பகுதி என மொத்தம் 3 கடைகள் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி குழந்தைகள் இந்த வழியாக பீதியுடன் செல்கின்றனர்.
குடிமகன்கள் இரு சக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்தி விட்டு செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குடிமகன்களின் இடையூரால் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மந்திப்தோப்பு பகுதி டாஸ்மாக் கடையை மூடகோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஊர்வலமாக சென்று கடையை முற்றுகையிட்டனர். பின்னர் அனைவரும் கடை முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பினர்.
இந்த தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications