ரோட்டில் மூடிய கடைகளை வீடு அருகே திறக்காதே.. "கெரசின்" கேன்களுடன் பெண்கள் போராட்டம்
நெடுஞ்சாலைகளில் மூடிய கடைகளை வீடுகள் இருக்கும் பகுதியில் திறப்பதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி: நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
இந்தக் கடைகள் உடனடியாக மூடப்பட்ட நிலையில், மக்கள் வசிக்கும் பகுதிகளில் திறக்க தமிழக அரசு முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனை தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் கடுமையாக எதிர்த்து போராடி வருகின்றனர். மண்ணெண்ணெய் கேன்களை கையில் எடுத்தும், சாலை மறியல் செய்தும், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மண்ணெண்ணெய் கேன்
நெய்வேலியை அடுத்துள்ள சிறுதான்குப்பம் மற்றும் தருமபுரி மாவட்டம் அடூரை அடுத்துள்ள முண்டுக்குழி, முல்லைவனம் போன்ற ஊர்களை சேர்ந்த பெண்கள் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் கேனுடன் சாலையில் போராட்டம் நடத்தினார்கள்.

கழுத்தில் மது பாட்டில் கட்டி..
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் அகற்றப்பட்ட மது கடையை மீண்டும் திறக்க கூடாது என்று பெண்கள் போராடி வருகின்றனர். இதே போல, அம்பிகாப்புரம் குடியிருப்பு பகுதியில் உள்ள கடைகளை திறக்கப்பட கூடாது எனக் கூறி இப்பகுதியை சேர்ந்தவர்கள் கழுத்தில் மது பாட்டில்களை அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள திங்குவார்பட்டி பகுதியில் மது கடையை அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தேர்தல் புறக்கணிப்பு
இதனையும் மீறி மதுக் கடை அமைக்கப்பட்டால் வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

முற்றுகை
கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் மூடப்பட்ட மதுக் கடைகளை ஊருக்குள் திறப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் திறப்பதற்காக முடிவு செய்யப்பட்டுள்ள வீட்டை இவர்கள் முற்றுகையிட்டனர்.

எதிர்ப்பு முழக்கம்
இதே போல நெல்லை மாவட்டத்தில் மூடப்பட்ட கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.

தொடரும் போராட்டம்
இதே போன்று, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூரை அடுத்துள்ள காட்பாடி, நாமக்கல் ராசிபுரம், தஞ்சாவூர், கோவில்பட்டி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக போராட்டம் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications