விருதுநகரில் வீட்டுப்பட்டா பெயர் மாற்ற ரூ.4000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
விருதுநகரில் வீட்டுப்பட்டா பெயர் மாற்ற ரூ.4000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது
விருதுநகர் : விருதுநகர் அருகே பாலவநத்ததில் பட்டா மாறுதலுக்கு ரூ.4000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் சேர்மக்கனி மற்றும் அவருக்கு உதவிய முன்னாள் விஏஓ ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தம் தெற்குப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரிடம் வீடு வாங்கி உள்ளார்.
அந்த வீட்டுப் பட்டாவைத் தன் பெயரில் மாற்றுவதற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளார். அப்போது பட்டா மாறுதலுக்கு 5000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பட்டாமாறுதல் செய்து தரப்படும் என பாலவநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சேர்மக்கனி தெரிவித்துஉள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனை அடுத்து இன்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கொடுத்த இரசாயனம் தடவிய 4000 ஆயிரம் பணத்தை சேர்மக்கனியிடம் கொடுத்தார்.
கிருஷ்ணன் கொடுக்கும் போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சீனிவாசபெருமாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீசார் சேர்மக்கனியைக் கைது செய்தனர்.
அவருக்கு உடைந்தையாக இருந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.