மது விலக்கைக் கொண்டு வாங்க, இல்லாட்டி சாக விடுங்க... பீதியைக் கிளப்பும் கலைச்செல்வி!
சென்னை: பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள், இல்லையென்றால் அதற்காக என்னை கருணைக்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள் என தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் கலைச்செல்வி முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அளித்துள்ளார்.
தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கம் பல ஆண்டுகளாக மதுவிலக்குக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த இயக்கத்தின் மாநிலதலைவரான கலைச்செல்வி இன்று தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த பல ஆண்டுகாலமாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி தமிழக பெண் களாகிய நாங்கள் காந்தியவழியில் போரடி வருகிறோம். மதுவால் பல குடும்ப பெண்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலை மாற வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்.
இல்லையெனில் 27.01.2016 அன்று கலைச்செல்வியாகிய என்னை மதுவிலக்கிற்காக கருணை கொலை செய்ய உத்திரவிட வேண்டி மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த அதிரடி மனு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.