பெண்களை இழிவு படுத்திய ”பீப்” பாடல் - தி.நகரில் சிம்பு வீட்டிற்கு முன் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
சென்னை: பீப் சாங்க் மூலமாக நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் பெண்களை இழிவுபடுத்தியதாகக் கூறி சிம்பு வீட்டிற்கு அருகே மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிம்பு-அனிருத் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சிம்பு வீட்டை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது நடிகர் சிம்புவை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத் தளங்களில் நடிகர் சிம்பு குரலில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியானதாகக் கூறப்படும் "பீப்" பாடல் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், பெண்களை கேவலமாகவும், ஆபாசமாகவும் தனது இசை ஆல்பத்தில் பாடிய நடிகர் சிம்பு, அந்தப் பாடலுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது, சிம்பு, அனிருத் ஆகிய இருவரின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டன.
சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்பு வீட்டை அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். சிம்புவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் சிம்பு எழுதி பாடிய அந்த பாடலை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.