பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை.... புகார் தர பெண்கள் தயங்குவதேன்? #womensday
பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை: பல பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை எதிர்த்து புகார் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள். பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து
70 சதவிகித பெண்கள் புகார் அளிப்பதில்லை என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
எத்தனையோ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகளினால் பணிக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடம் கிடைப்பது அரிதாக உள்ளது. பார்வையால் பலாத்காரம் செய்யும் ஆண்கள்,
சிரித்து பேசினாலே பணிந்து போய்விடுவாள் என்று நினைத்து நூல் விடும் உயரதிகள் பல இடங்களில் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
வளர்ந்த நாடுகளில் மட்டுமல்ல வளரும் நாடுகளிலும் உலகில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடரத்தான் செய்கின்றன.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள்
சின்னஞ்சிறு பிள்ளைகள், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள் மட்டுமல்லாது சித்தாள், விவசாய கூலிகள், நெசவு தொழிலாளிகள் ஏன் நூறுநாள் வேலைக்கு செல்லும் பெண்கள் கூட பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
பாலியல் துன்புறுத்தல்
அலுவலங்களில் பெண்கள் பார்க்கும் போது ஆபாச செய்கைகள், கீழ்த்தரமான கருத்துகள், தவறான எண்ணத்தில் தொட்டு பேசுதல், நேரடியாக பாலியல் உறவுக்கு அழைத்தல், உடல் ரீதியாக துன்புறுத்துதல் உள்ளிட்ட பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கிறது.
குற்றவாளிகளுக்கு சாதகம்
நடிகைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் போது குற்றவாளிகள் மீது நடவடிக்கை பாய்வதில்லை என்பதே உண்மை. பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பெரும்பாலும் வெளியில் சொல்வது கிடையாது. ஏனெனில், அவ்வாறு தெரிவித்துவிட்டால், நான்கு சுவருக்குள் நடப்பது ஊருக்கே தெரிந்துவிடுகிறதே என்ற தயக்கம்தான். இதுவும் குற்றம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.
பாலியல் துன்புறுத்தல் ஆய்வு
இது குறித்து இந்திய பார் அசோசியேஷன் இந்த ஆண்டு ஆய்வு நடத்தியது. ஆய்வில், 6,047 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை, தீர்வு) சட்டம், கொண்டுவரப்பட்டது. ஆனால், 70 சதவிகித பெண்கள் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதில்லை என இந்த ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மறைமுக பாலியல் தொல்லை
சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி, மும்பை என நாட்டின் முன்னணி நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நீக்கமற, இத்தகைய பாலியல் தொல்லைகள்
மறைமுகமாக நடைபெறுவதாகவும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அட்ஜஸ்ட்மென்ட்
ஒரு நிறுவனத்தின் வேலை கிடைக்க வேண்டுமெனில் அல்லது வேலையை நிரந்தரம் செய்துகொள்ளவும், சம்பள உயர்வு போன்ற சலுகைகளுக்காகவும் என பல விதங்களில் பாலியல் ரீதியாக, அட்ஜஸ்மெண்ட் செய்து செல்லும்படி தங்களது உயர் அதிகாரிகள் வற்புறுத்துவதாக, பல பெண்கள் தெரிவித்துள்ளனர்.
நிரந்தர தீர்வு இல்லை
பணிபுரியும் இடங்களில் பாலின சமச்சீர்மையின்மை இன்றளவும் இருந்து வருகிறது. ஹெச்ஆர் மேனேஜரில் தொடங்கி, நிர்வாக அதிகாரிகள் வரையிலும் பலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண்கள் கூறுகின்றனர். பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்முறை குறித்து புகார் அளிப்பதில்லை. அப்படியே புகார் அளித்தாலும்,அதற்கு தீர்வு கிடைப்பதில்லை என கூறுகின்றனர்.
தொடரும் தொல்லைகள்
உயரதிகாரிகளின் காம இச்சைக்கு இணங்காதநிலையில், அதிக பணிச்சுமையை ஏற்படுத்துவது, இரவு ஷிப்ட் உள்ளிட்ட தொல்லைகளை செய்வது என உயர் அதிகாரிகளின் தொல்லை நீளுவதாகவும் பெண்கள் குறிப்பிடுகின்றனர். பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடத்திலோ அல்லது படிக்கும் இடத்திலோ இது போன்ற சம்பவம் நேர்ந்தால், அதைத் துணிச்சலுடன் வெளியே சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்லும் பெண்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது பெண்ணியல் ஆர்வலர்களின் கருத்து.
வெளியே சொல்லுங்கள்
அதைப் போல், ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தைரியமாக வெளியே சொல்லும் பட்சத்தில் அவரைச் சமுதாயம் ஏளனமாகப் பார்க்கக்கூடாது. மாறாக, அவரை ஆதரிக்க வேண்டும். எனினும், குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் குழந்தைகளுக்கு இது குறித்த விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றோர்கள் கூட்டி வளர்க்க வேண்டும் என்றும் பெண்கள் கூறியுள்ளனர்.
மனநல பயிற்சிகள்
தேசிய அளவில் வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமின்றி ஆண் உயர் அதிகாரிகளுக்கு மனநலப் பயிற்சி முகாம்கள் வழங்குவது போன்ற சிற்சில முயற்சிகளை முன்னெடுத்தால் மட்டுமே வரும்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் நிகழாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆண்களுக்கும் ஆலோசனை
பெண்களின் உடை, நடத்தைகளைப் பற்றி பேசும் அதே நேரத்தில் பணியிடங்களில் உள்ள ஆண்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் பிற பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள், பணிக்கு செல்லும் தங்களின் மனைவி, சகோதரி, மகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்ட பெண்களின் கருத்தாகும்.