உலகின் முதல் கார் வடிவிலான வாகனம்- கோவையிலிருந்து சென்னை வரை 500கி.மீ பயணித்து சாதனை!
சென்னை: உலகில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட கார் வடிவிலான வாகனம் கோவை முதல் சென்னை வரையில் 500 கிலோ மீட்டர் கடந்து சாதனை படைத்துள்ளது.
உலகில் முதன் முதலாக 1886 ஆம் ஆண்டு எந்திரத்தின் மூலம் இயங்கும் வாகனத்தை ஜெர்மனி நாட்டின் கார்ல் பென்ஸ் என்ற எஞ்சினியர் கண்டுபிடித்தார். 3 சக்கரங்களை கொண்ட இந்த வாகனத்தில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

தமிழகத்தின் பிரபல விஞ்ஞானியான மறைந்த ஜி.டி.நாயுடுவின் மகன் ஜி.டி.கோபால் 1886 ஆம் ஆண்டில் முதலாவதாக தயாரான அந்த கார் வடிவில் ஒரு வாகனத்தை தயாரித்தார்.
500 கிலோ மீட்டர் தூர சாதனைப் பயணம்:
அந்த வாகனத்தின் 500 கிலோ மீட்டர் தூர சாதனை பயணம் கோவையில் உள்ள ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்தில் இருந்து கடந்த 14 ஆம் தேதி மாலை தொடங்கியது. இந்த வாகனம் ஈரோடு, சேலம், விழுப்புரம் வழியாக நேற்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்தடைந்தது.
பென்சீன் மூலம் இயக்கம்:
மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த காரை இயக்குவதற்காக 6 டிரைவர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு 30 கிலோ மீட்டர் தூரத்துக்கும் ஒரு டிரைவர் என ஓட்டிவந்தனர். இதற்கு தேவையான "பென்சீன்" எரிபொருள் மற்றொரு வேனில் கொண்டுவரப்பட்டது.
முறியடித்துள்ள வாகனம்:
1886 ஆம் ஆண்டு முதல் கார் 194 கிலோ மீட்டர் தூரம் சென்றது பெரிய சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய வாகனம் முறியடித்துள்ளது. ஏற்கனவே ஒரு முன்னோட்டமாக கடந்த ஜூன் மாதம் கோவையில் இருந்து சேலம் வரை 165 கிலோ மீட்டர் தூரத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தது குவாட்டிரி சைக்கிள்:
நேற்று சென்னை வந்த அந்த வாகனம் தாஜ் கன்னிமாரா ஓட்டலில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் போர்டு நிறுவனத்தின் பழமையான தயாரிப்பான "குவாட்டிரி சைக்கிள்" என்ற வாகனத்தை தயார் செய்து சோதனை ஓட்டம் செய்து வருவதாகவும், விரைவில் அதையும் சாதனை பயணத்தில் பயன்படுத்த இருப்பதாகவும் ஜி.டி.நாயுடு அறக்கட்டளை நிர்வாகியும், அவரது மகனுமான ஜி.டி.கோபால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications