ஏற்காடு இடைத்தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்கு எண்ணிக்கை!
சேலம்: ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன.
ஏற்காடு இடைத்தேர்தல் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக சரோஜா, தி.மு.க.வேட்பாளராக வெ.மாறன் மற்றும் 9 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவுக்காக தொகுதி முழுவதும் 290 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 269 வாக்குச்சாவடிகள் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பானது.
89% வாக்குப் பதிவு
இத் தேர்தலில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 40 ஆயிரத்து 290 வாக்காளர்களில், 2 லட்சத்து 14 ஆயிரத்து 434 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது 89.24% ஆகும்.
சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக்கில்..
வாக்குப்பதிவு முடிந்ததும், அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் சேலம்-ஏற்காடு ரோட்டில் வாக்கு எண்ணும் மையமான சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியின் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
3 அடுக்கு பாதுகாப்பு
அங்கு தற்போது துணை ராணுவப்படையை சேர்ந்த 186 வீரர்கள், தமிழக போலீசார் அடங்கிய குழுவினர் என மூன்றடுக்கு பாதுகாப்பில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.வாக்கு எண்ணும் மையம் 24 மணிநேரமும் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாளை வாக்கு எண்ணிக்கை
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி மாலை வரை நடைபெறுகிறது. முற்பகல் 11.30 மணிக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.