ஈரோடு: போலீசார் லஞ்சம் கேட்டதால் இளைஞர் தற்கொலை.. கொட்டும் மழையில் உறவினர்கள் போராட்டம்
லஞ்சம் கேட்ட போலீசாரை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு: திருட்டு வழக்கிலிருந்து விடுவிக்க போலீசார் லஞ்சம் கேட்டதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து லஞ்சம் கேட்ட போலீசார் மீது நடவடிக்கை கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள பசுவபட்டியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது வீட்டில் தங்கநகை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த விஜய் ஆனந்த் என்பவரை பிடித்து சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க அவரது சகோதரர் விஜயபாஸ்கரிடம் 6 ஆயிரம் ரூபாய் போலீசார் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜயபாஸ்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அவரது தற்கொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெருந்துறை அரசு மருத்துவமனையில் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications