திருமாவளவன் பிரசாரத்தில் சோகம்.. மின்சாரம் தாக்கி பலியான இளைஞர்.. கட்சி கொடியால் பறிபோன உயிர்
கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. விசிகவிற்கு மொத்தம் 8 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக, திமுக மற்றும் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திருமாவளவன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கணேசன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2016, 2021ல் திட்டக்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது 3வது முறையாக வெல்லும் முனைப்பில் திமுக சார்பில் போட்டியிட்டுள்ளார்.
இவரை ஆதரித்து நேற்று திருமாவளவன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விசிகவினர் ஏராளமாக கலந்து கொண்டனர். பிரசாரத்தையொட்டி சாலையோரம் இரும்பு கம்பிகளில் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. டிரான்ஸ்பார்மரின் அருகே கட்சி கொடி கட்டப்பட்ட இரும்பு கம்பி இருந்தது. இதனை ம.பொடையூரை சேர்ந்த அஜித் என்ற இளைஞர் தொட்டுள்ளார். அப்போது டிரான்ஸ்பார்மரில் அந்த கம்பி பட்டுள்ளது. இதனால் கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்ததில் அஜித் தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அஜித்தை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அஜித் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது விசிகவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி திருமாவளவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருமாவளவன், அமைச்சர் கணேசன் ஆகியோர் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்த இளைஞர் அஜித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுபற்றி திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ''திட்டக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி.வெ.கணேசனை ஆதரித்து இன்று பரப்புரை மேற்கொண்டபோது கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆங்கே திரண்டிருந்த சிறுத்தைகளில் ம.பொடையூரைச் சார்ந்த தம்பி அஜித் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார்.
நெஞ்சை உலுக்கிய பெருந்துயரம். தாங்கவியலாத பேரதிர்ச்சி. உடனே மருத்துவமனைக்குச் சென்று அவரது திருவுடலுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினோம். அங்கே கதறியழுத அவரது தாய், தந்தை மற்றும் தம்பி ஆகியோரை ஆற்றுப்படுத்தினோம். அவரது குடும்பத்திற்கு கட்சியின் சார்பில் ரூ.ஐந்து லட்சம் குடும்ப ஆறுதல் நிதி வழங்கப்பட்டது. மறைந்த தம்பி அஜித்திற்கு எமது வீரவணக்கம்! அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்!'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications