”என்னைக் கருணைக் கொலை செய்யுங்கள்” – மனதை உருக்கும் சேலம் இளைஞரின் கோரிக்கை
சேலம்: சேலத்தில் இளைஞர் ஒருவர் தன்னைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டை ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் நேற்று தனது தாயாருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் வருவாய் அதிகாரி செல்வராஜிடம் ஒரு மனு கொடுத்தார்.
அதில், தன்னுடைய நண்பர்கள் ஊர் திருவிழாவின்போது குடிபோதையில் அவரை அடித்துக் காயப்படுத்தியதில் படுகாயமடைந்த அவருக்கு எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் உடலை அசைக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அவரது தந்தையும், தாயும்தான் வேலைக்குச் சென்று அவரைக் காப்பாற்றி வருகின்றனர்.
இதனால் அவர் தன்னுடைய மனுவில், "அய்யா தாங்கள் மனம் இறங்கி என்னை கருணை கொலை செய்ய வேண்டுமாய் இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு இப்போதைய நிலை மருத்துவமனையில் சென்று பார்க்க முடியவில்லை. எங்கு சென்றாலும் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விடுவதாலும், செலவு செய்ய முடியாத சூழ்நிலையிலும் தயவு செய்து எனக்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
தற்பொழுது என்னை மீண்டும் கொலை செய்து விட்டால் கூட பரவாயில்லை. இப்போது வலியின் காரணமாகவும் தாங்க முடியாத காரணத்தாலும் என் முழுமனதுடன் சம்மதிக்கிறேன். தயவு செய்து கருணை கொலை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications