பணிநேரத்தில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர்: மருத்துவமனையில் அனுமதி
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்ய தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள பாகூர் அருகே இருக்கும் குருவிநத்தம் பெரியார் நகரில் வசித்து வருபவர் பாலமுரளி(24). புதுவை ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளார். அவருக்கு பாகூர் தாசில்தார் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கரூவூலத்தை பாதுகாக்கும் பணி அளிக்கப்பட்டது.
திங்கட்கிழமை காலை 6 மணிக்கு அவர் கரூவூலத்தில் உள்ள குளியல் அறைக்கு சென்று தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது கழுத்தில் வைத்து சுட்டுக் கொண்டார். இதில் குண்டு அவரின் தாடை வழியாக வெளியே வந்தது. இதையடுத்து முரளி மயங்கி விழுந்தார். காலை 7 மணிக்கு மாதேஷ் என்ற போலீஸ்காரர் முரளியை பணிமாற்ற கரூவூலத்திற்கு வந்தார்.
முரளியை காணவில்லை, ஆனால் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த குளியல் அறை கதவு வழியாக ரத்தம் வந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே குளியல் அறை கதவை உடைத்து பார்த்தபோது முரளி ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் முரளி புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை செங்கல்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.