அண்ணனுக்கு மனைவியாக இருந்த மணமகளுக்கு தாலி கட்டிய தம்பி.. காரணம் "காளீஸ்வரி" கண்!
திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே அண்ணன் தாலி கட்டவிருந்த நேரத்தில் திடீரென அவரை தள்ளி விட்டு விட்டு மணமகள் கழுத்தில் தம்பி தாலி கட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் பார்க்கச் சென்றபோது அண்ணனை விட்டு விட்டு தம்பி மீது மணமகள் காதல் கொண்டதால் இந்த வினை. பெரும் களேபரமாகி விட்டதால் கல்யாண வீட்டில் சமைக்கப்பட்ட விருந்தை யாரும் சாப்பிடவில்லை.
மாப்பிள்ளை வீட்டார் சோகத்துடன் சென்ற போதிலும், பெண் கல்யாணம் நிற்காமல் நடந்து விட்டதே என்ற அளவில் இத்திருமணத்தை பெண் வீட்டார் அங்கீகரித்து மணமக்களை கூட்டிச் சென்றனர்.

அண்ணன் தம்பி
அந்த அண்ணன் தம்பி பெயர் ராஜேஷ், வினோத். ராஜேஷுக்கு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவரை பெண் பார்த்து நிச்சயம் செய்தனர். இவர்களின் திருமணம் திருப்பத்தூர் இலவம்பட்டி, வெண்கல்குன்றம் பாலமுருகன் கோயிலில் நேற்று காலை திட்டமிடப்பட்டிருந்தது.

கடைசி விநாடியில் திருப்பம்
நேற்று காலை 7.30 மணிக்கு மணமேடையில் மணமக்கள் அமர்ந்ததும், திருமண சடங்குகள் தொடங்கியது. 8.45 மணியளவில் பூஜை செய்த தாலியை பெரியோர்களிடம் ஆசி வாங்கி வரச்செய்தனர். கெட்டி மேளம் கொட்ட தாலியை மணமகனிடம் கொடுத்தார் புரோகிதர். அப்போதுதான் அந்த திடீர் சம்பவம் நடந்தேறியது.

அண்ணனை தள்ளி விட்ட தம்பி
ராஜேஷ் அருகில் நின்றிருந்த வினோத், தனது அண்ணன் தாலி கட்ட தயாரானபோது திடீரென அவரை தள்ளி விட்டார். பின்னர் தான் வைத்திருந்த இன்னொரு தாலியை எடுத்து வேகமாக காளீஸ்வரி கழுத்தில் கட்டி விட்டார். இதைப் பார்த்து திருமணத்திற்கு வந்த அத்தனை பேரும் அதிர்ச்சியில் சமைந்து போனார்கள்.

சரமாரி அடி உதை
ராஜேஷ் குடும்பத்தினர், உறவினர்கள், பெண் வீட்டார் அனைவரும் வினோத் மீது பாய்ந்தனர். அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். ஆனால் மணமகளோ எந்த டென்ஷனும் இல்லாமல் குத்துக்கல்லாக உட்கார்ந்திருந்தார். இது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரிடம் போய் விசாரித்தபோதுதான் குட்டு உடைந்தது.

கலகத்திற்குக் காரணம் காளீஸ்வரியின் கண்!
அதாவது பெண் பார்க்க ராஜேஷ் குடும்பத்தினர் போயிருந்தபோதுதான் அந்தக் கூத்து நடந்துள்ளது. பெண் பார்க்க வந்த சமயத்தில், ராஜேஷைப் பார்க்காமல் வினோத்தைப் பார்த்துள்ளார் காளீஸ்வரி. வினோத்தும் காளீஸ்வரியைப் பார்த்துள்ளார். பார்த்த மாத்திரத்தில் இருவருக்குள்ளும் காதல் வந்து விட்டது. ஆனால் வெளியில் சொல்லவில்லை. கல்யாண மண்டபத்தில் வைத்து கலகத்தை ஏற்படுத்தி விட்டனர்.

சட்டையைக் கிழித்துக் கொண்டு ஓடிய ராஜேஷ்
தம்பியின் செயலால் பெரும் அதிருப்தி அடைந்த ராஜேஷ் மன வேதனையில் கதறி அழுதார். தனது சட்டை, வேட்டியை கிழித்து எறிந்தார். அழுதபடி கோவிலை விட்டு வேகமாக கிளம்பிப் போனார். அவருடன் பெற்றோரும் பின்னாலேயே அழுதபடி போனார்கள்.

பெண் வீட்டுக்கு ஓகே
ஆனால் பெண் வீட்டார் எப்படியோ மகள் கல்யாணம் நிற்காமல் நடந்ததே என்ற அளவுக்கு திருப்தி பட்டுக் கொண்டனர். வினோத்தையும், மகளையும் அழைத்துக் கொண்டு ராஜபாளையம் புறப்பட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications