செல்போனில் ஆபாசமாகப் பேசி பெண்ணுக்கு தொல்லை தந்த கட்டிட தொழிலாளி கைது!
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பெண்ணுக்கு செல்போனில் ஆபாசமாகப் பேசி தொந்தரவு செய்து வந்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் அருகே திருவட்டாரை அடுத்த அணைக்கரை பகுதியில் தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் கீதா ( பெயர் மாற்றப் பட்டுள்ளது ). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீதாவின் செல்போனிற்கு மிஸ்டு கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் அந்த பெண்ணிடம் தவறுதலாக அவருக்கு போன் செய்து விட்டதாகவும், இனி அவ்வாறு செய்ய மாட்டேன் எனவும் கூறினார். அந்த நபரின் பேச்சால் மிஸ்டு கால் சமாச்சாரத்தை பெரிது படுத்தாத கீதா, அது பற்றி உறவினர்களிடம் கூறவில்லை.
ஆனால், தொடர்ந்து அந்த எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. தொடக்கத்தில் சாதாரணமாக பேசிய அந்நபர், பின்னர் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த கீதா, அந்நபரை எச்சரித்துள்ளார்.
ஆனால், தொடர்ந்து அந்நபர் மீண்டும், மீண்டும் தொடர்பு கொண்டு பேசி தொல்லை கொடுத்துள்ளார். அவரது பேச்சு எல்லை மீறியதால் மனம் உடைந்த கீதா, இது தொடர்பாக தனது உறவினர்களிடம் தெரிவித்ததோடு, அவரை கையும் களவுமாக பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த நபர் டிமிக்கி கொடுத்து செல்போனில் மட்டுமே தொந்தரவு கொடுத்தபடி இருந்தார்.
இதனால், போனில் தனக்கு தொல்லை கொடுக்கும் நபர் குறித்து திருவட்டார் போலீசில் கீதா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்போன் எண் மூலம் அந்த நபரின் விலாசத்தைக் கண்டு பிடித்தனர். விசாரணையில், அவர் தக்கலையை அடுத்த கொற்றியோடு, ஈத்தவிளையைச் சேர்ந்த இருதயராஜ் என தெரிந்தது.
கட்டிட தொழிலாளியான இருதயராஜ் தான், கீதாவுக்கு செல்போனில் தொல்லை கொடுத்தது என உறுதியானது. அதனைத் தொடர்ந்து, இருதயராஜைக் கைது செய்த போலீசார், அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications