கிழிந்த பேண்ட்... ஆசனவாயில் காற்றை செலுத்திய நண்பர்கள்: உடல் ஊதிய வாலிபர் கவலைக்கிடம்
சென்னை: ஆசனவாய் வழியாக காற்று செலுத்தப்பட்ட அம்பத்தூர் வாலிபர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
நண்பர்களின் விளையாட்டுத்தனம் விபரீதமாகிய சம்பவம் ஒன்று அம்பத்தூரில் நடந்துள்ளது. அம்பத்தூர் அத்திப்பட்டு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த மோகன் என்பவரது மகன் கார்த்திக். 24 வயதான கார்த்திக் அம்பத்தூர் எஸ்டேட் வாவின் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் பணி புரிந்து வருகிறார்.
கார்த்திக்கின் நண்பர்களான ஐயப்பாக்கத்தைச் சேர்ந்த விஜய் என்கிற விஜயகுமார் (22), வினோத்குமார்(23) ஆகிய இருவரும் அதே கார் விற்பனை நிலையத்தில் தான் பணி புரிந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் மூன்று பேரும் காற்றடிக்கும் இயந்திரத்தின் மூலமாக கார்களைச் சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது எதேச்சையாக கார்த்திக்கின் பேண்ட் பின்புறத்தில் கிழிந்திருந்ததைக் கண்ட விஜயும், வினோத்தும் விளையாட்டுத் தனமாக கார்த்திக்கின் ஆசனவாயில் காற்றடிக்கும் இயந்திரத்தை வைத்துள்ளனர். இதனால், கார்த்திக்கின் உடல் உப்பியுள்ளது. உடனே, கார்த்திக் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
விளையாட்டுத் தனமாக செய்த காரியம் விபரீதமாகியதைக் கண்டு பதறிய நண்பர்களின் அலறல் கேட்டு விரைந்து வந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக கார்த்திக்கை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் கார்த்திக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மகனுக்கு நடந்த கொடுமை குறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் கார்த்திக்கின் தந்தை மோகன் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் வினோத் மற்றும் விஜயைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications