குடிக்க பணம் கேட்டா கொடுக்க மாட்டீங்களா மாமா... அடித்து மண்டையை உடைத்த மருமகன்
நெல்லை: குடிப்பதற்கு பணம் தர மறுத்த மாமனாரை கடுமையாக அடித்து மண்டையை உடைத்து விட்டார் ஒரு மருமகப் பிள்ளை.
நெல்லை மாவட்டம் ராயகிரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (58). இவரது மருமகன் சுரேஷ். இவர் கூலித் தொழிலாளி. மாமனார் வீட்டோடு கூட்டுக் குடும்பமாக, இருந்து வருகிறார்.
நல்ல குடிப்பழக்கத்துடன் கூடிய குணவானாக திகழ்ந்துள்ளார் சுரேஷ். அடிக்கடி குடிப்பார். மனைவியிடம் பணம் வாங்கிக் குடிப்பார். சமீப காலமாக மாமனாரிடமும் குடிக்கப் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.
ஆனால் மாமனார் சுப்பிரமணியம் குடிக்க பைசா தர மாட்டேன் என்று கூறி விட்டார். இந்த நிலையி்ல சம்பவத்தன்றும் மாமா குடிக்கப் பணம் வேணும் காசு கொடுங்க என்று கேட்டுள்ளார். முடியாது என்று கூறி விட்டார் சுப்பிரமணியம்.
கோபமாகிப் போன சுரேஷ், கீழே கிடந்த கட்டையை எடுத்து மாமனார் தலையில் சரமாரியாக அடித்து விட்டார். இதில் சுப்பிரமணியத்தின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
உடனடியாக அவரை சிவகிரி அரசு மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுரேஷைக் கைது செய்துள்ளனர்.
குடிகாரப்பயலுக அக்கிரமம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறதே...!