செல்போன் ஆதாரம்.. பெண் கொலையில் 10 மணி நேரத்தில் கொலையாளியை பிடித்த போலீஸ் !
பெண் கொலை செய்யபட்ட வழக்கில் செல்போன் ஆதாரத்தை வைத்து கொலையாளியை 10 மணிநேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் செல்போன் ஆதாரத்தை வைத்து 10 மணி நேரத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துத்துரை(29). இவரது மனைவி திவ்யா (25). நேற்று முன்தினம் காலை வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
திவ்யா சடலமாக கிடந்த இடத்தில் ஒரு செல்போனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த செல்போனை பாண்டிக்குடியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் பயன்படுத்தியது என்பது தெரியவந்தது. இதனிடையே இரவோடு இரவாக திருப்பூருக்கு தப்பி ஓடிய திருநாவுக்கரசை விரைந்து சென்ற கீரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தான் திவ்யாவை கொலை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து சீனிவாசன் போலீசாரிடம் கூறுகையில், நானும் முத்துத்துரையும் நண்பர்கள். அவர் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் போது அவரின் மனைவி திவ்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அதை தெரிந்துகொண்ட முத்துரை எங்களை கண்டித்தார். அதன் பிறகு திவ்யா வீட்டுக்கு செல்வதை தற்காலிகமாக தவிர்த்து விட்டேன்.
சம்பவத்தன்று இரவு திவ்யா வீட்டுக்குச் சென்றேன். அப்போது தனியாக அருகில் உள்ள தோட்டத்திற்குள் அழைத்து பேசிக் கொண்டிருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் திவ்யாவின் கழுத்தை நெறித்தேன். மயங்கி விழுந்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். போகும் போது எனது நண்பனிடம் வாங்கி வந்த செல்போன் தவறி விழுந்துவிட்டது. ஆனால் அவள் இறந்துவிட்ட தகவல் காலையில் தான் தெரியும் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.