சென்னையில் பரபரப்பு.. காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து.. இளைஞர் வெறிச்செயல்!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை கோயம்பேட்டில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் முகத்தில் குத்தி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தனியார் நிறுவனமான ஆச்சி மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் சிவரஞ்சனி(25) சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் இவர், தீபாவளி பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊரான திருவாரூக்கு செல்ல நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது தமிழக தேர்தல் ஆணையம் அருகே அவரை வழி மறித்த இளைஞர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணை குத்தியுள்ளார்.
இதில் முகத்தில் குத்துபட்டு உதடு பகுதி கிழிந்துள்ளது. இதையடுத்து சிவரஞ்சனி கூச்சலிட்டதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை மடக்கி பிடித்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். கத்தி குத்தால் காயம் அடைந்த இளம் பெண் சிவரஞ்சனி சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிடிபட்ட இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் அரவிந்த் (32) என்பதும் கிண்டியில் வசித்து வருவதாகாவும் தெரியவந்தது.
மேலும், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அரவிந்த்தும், சிவரஞ்சனியும் ஒரு பிபிஓ நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றி உள்ளனர். அப்போது, அரவிந்துக்கு சிவரஞ்சனி மீது ஒருதலைக் காதல் உருவாகி உள்ளது. ஆனால் சிவரஞ்சனி அரவிந்தை காதலிக்கவில்லை. அவனது காதலை ஏற்க மறுத்துவிட்டார். அரவிந்த்குமார் தொடர்ந்து தொல்லை கொடுக்கவே தான் பார்த்து வந்த பிபிஓ பணியை விட்டுவிட்டு ஆச்சி மசாலா கம்பெனியில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
ஆனாலும், அரவிந்த்குமார் தொடர்ந்து தொல்லை தந்து வந்துள்ளார். சிவரஞ்சனியும் தொடர்ந்து மறுத்துவந்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த அரவிந்த் சிவரஞ்சனியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் கத்தியால் குத்தப்பட்ட இளம்பெண் சிவரஞ்சனி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். போலீஸார் அரவிந்தை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அரவிந்து தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.