15 வயது சிறுமியை கடத்தி சீரழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
கரூர்: கரூரில் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பெரியமஞ்சு வழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (27). இவர் இப்பகுதியில் கூலி தொழில் புரிந்து வருகிறார். இதே பகுதியை சார்ந்த சுனிதா (பெயர் மாற்றப்பட்டது) என்பவரை கடந்த 2011 ம் வருடம் (அப்போது அவருக்கு வயது 15), அரசு உயர் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளி செல்வதற்காக பேருந்திற்காக பஸ் ஸ்டாப்பில் காத்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஜெயக்குமார் சுனிதாவை கடத்தி கொண்டு போய் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பகுதியில் உள்ள முருகன் கோயிலில் வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளார். பின்பு சென்னை அழைத்து சென்று குடும்பம் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் சுனிதாவின் தந்தை கிருஷ்ணசாமி அரவக்குறிச்சி போலீஸில் புகார் செய்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட அரவக்குறிச்சி போலீஸார் சென்னையில் பதுங்கியிருந்த ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி எம்.குணசேகரன் ஜெயக்குமாருக்கு ஆள்கடத்தல் பிரிவுக்கு பத்தாண்டு சிறை தண்டனையும் ரூ ஆயிரம் அபராதமும், மேலும் பாலியல் தொல்லை செய்ததற்காக பத்தாண்டு சிறை தண்டனையும், ரூ ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
இந்த தண்டனை சிறுமிகளை கடத்தி கொண்டு போய் பாலீயல் தொந்தரவு கொடுக்கும் வாலிபர்களுக்கு முன்னுதராணமாக விளங்கி உள்ளது பெண்கள் சங்கத்தினர் கருத்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications