அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கு... இது தியாகத் தலைமுறை: தீக்குளித்தவரின் உருக்கமான கடிதம்
அருந்ததியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி தீக்குளித்த ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த மகேஸ்வரன் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.
திருப்பூர்: ஆதித் தமிழர் பேரவையின் திருப்பூர் மாவட்ட துணைத் தலைவராக இருந்த மகேஸ்வரன் நேற்று நள்ளிரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து எழுதியுள்ள உருக்கமான கடிதம் தற்போது கிடைத்துள்ளது. சிறிய துண்டுச் சீட்டில் "மகேஸ்வரன் ஆதித்தமிழர் பேரவை திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவர் திருப்பூர் என்று அவரது முகவரியை மகேஸ்வரன் எழுதியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அடுத்த துண்டு சீட்டில் "தமிழக அரசே! அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்தி வழங்கு!" என்று எழுதி கையொப்பமிட்டு தேதி இரவு 12 மணி என்பதை குறிப்பிட்டுள்ளார்.
உருக்கமான கடிதம்
மேலும், "இறப்புகள் தொடரலாம் இலக்கை அடையும் வரை உள்இட ஒதுக்கீட்டை விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தி பெற்றே தீருவோம். ஆம்! இது தியாகத் தலைமுறைதான்!" என்று எழுதி அங்கும் தனது கையொப்பத்தை இட்டுள்ளார்.
தீக்குளிப்பு
இந்தக் கடித்ததை எழுதி முடித்த மகேஸ்வரன், நள்ளிரவு ஒரு மணியளவில் திருப்பூர் பார்க் சாலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
2 உயிர் பலி
இதே கோரிக்கை வலியுறுத்தி ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த நீலவேந்தன் மற்றும் ராணி ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். ஆனாலும் இந்தக் கோரிக்கை பற்றி தமிழக அரசு இன்னும் வாயே திறக்கவில்லை என்ற நிலையில் இன்று மற்றொரு ஆதித்தமிழர் தொண்டர் தீக்குளித்துள்ளார்.
திமுக ஆட்சியில்..
திமுக ஆட்சியின் போது எஸ்.சி. பிரிவில் உள் ஒதுக்கீட்டை உருவாக்கி 3 சதவீத இடஒதுக்கீடு அருந்ததியருக்கு வழங்கப்பட்டது. இதனை 6 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக தமிழகத்தில் அருந்ததியர் சமூகத்தினரால் வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.