மெரீனா கடற்கரையில் கொந்தளிக்கும் லட்சம் மாணவர்கள்.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
சென்னை மற்றும் புறநகர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மெரினா கடற்கரைக்கு வந்துள்ளதால் கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக் கோரி தமிழக தலைநகர் சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
செவ்வாய்கிழயன்று மெரீனாவில் திரண்ட மாணவர்கள் இரண்டாவது நாளாக புதனன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, கல்லூரிகள் 4 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு மெரீனா கடற்கரையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு திரண்டனர்.
இளைஞர்கள், மாணவர்கள் கூட்டத்தால் மெரீனா கடற்கரை சாலை ஸ்தம்பித்தது. காமராஜர் சாலையில் திரண்டிருந்த மாணவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும். இதற்காக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்க தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்பது போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கை. இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேரம் செல்லச் செல்ல மாணவர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை தரமணி, பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய மகாபலிபுரம் சாலையில் ஐடி நிறுவன ஊழியர்களும், ஜேப்பியார் கல்லுரி மாணவர்களும் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் மற்றும் ஐடி நிறுவன ஊழியர்கள் சாலையில் பேரணியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சென்னை முழுவதும் போராட்டம் நடைபெற்று வருவதால் போலீசார் திணறி வருகின்றனர்.