கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு எதிரான வீடியோ ஆதரங்கள் உள்ளன- அரசு வக்கீல் வாதம்
சென்னை: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு எதிரான வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அந்த வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை உட்பட 17 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.
அதில் யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர் ஆகிய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

குண்டர் சட்டம் ரத்து
யுவராஜ் மீதான குண்டர் தடுப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி சுமிதா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எஸ்.நாகமுத்து அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.

ஜாமீன் கோரிக்கை
இதையடுத்து தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் யுவராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘யுவராஜ் 150 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீன் கொடுக்க வேண்டுமா?
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பலருக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், யுவராஜுக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்படவில்லை. அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று வாதிட்டார். அதற்கு நீதிபதி, இத்தனை நாட்கள் சிறையில் இருப்பதால், ஜாமீன் வழங்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

ஆதாரங்களை அடுக்கிய அரசு தரப்பு
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல், ‘கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் போலீசில் உள்ளது. கோவிலில் வைத்து கோகுல்ராஜை பிடித்து செல்வது, காரில் ஏற்றுவது போன்ற வீடியோ ஆதாரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.

ஜாமீன் தர எதிர்ப்பு
கோகுல்ராஜை மிரட்டி கைப்பட எழுதி வாங்கியது, போனில் மிரட்டல் விடுத்தது போன்றவைகளும் உள்ளன. யுவராஜ் சாதி அமைப்பு ஒன்றை நடத்துகிறார். அப்பகுதியில் செல்வாக்குடன் உள்ளார். எனவே, இவருக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார். இவர் மீது ஈமு கோழி மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்று வாதிட்டார்.

வழக்கு ஒத்திவைப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பல வழக்குகளில் தொடர்புடைய இவருக்கு எப்படி ஜாமீன் வழங்க முடியும்? என்று கேள்வி கேட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை மே முதல் வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications