அம்மாபேட்டையில் ஒரே பள்ளியில்... 56 மாணவிகளுக்கு கொரோனா... 2 வாரங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
தஞ்சை: அம்மாபேட்டை அருகிலுள்ள அரசு பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளிக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை அடுத்துள்ள அம்மாபேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டிருந்த இந்த பள்ளியில், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நடந்து வருகிறது.

இந்தப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அந்தப் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 460க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் முதலில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் 16 மாணவிகள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாகத் தஞ்சை அம்மாபேட்டை அரசு உதவி பெறும் மகளிர் பள்ளிக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மற்ற மாணவிகளின் கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பள்ளியில் படிக்கும் மேலும், 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளியில் படிக்கும் மொத்தம் 56 மாணவிகளுக்கு தற்போதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
இதையடுத்து அப்பள்ளி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மேலும், பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications